டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு!
டாடா மின்சார கார்களில் பயன்படுத்தப்பட இருக்கும் முக்கிய தொழில்நுட்ப விபரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே டிகோர் மின்சார கார்களை அரசுத் துறை நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வருகிறது. இந்த நிலையில், தனிநபர் சந்தையிலும் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அடுத்த ஆண்டு அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தனது எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்பட இருக்கும் மின் மோட்டார் மற்றும் டிரான்ஸ்மிஷன் குறித்த விபரங்களை வெளியிட்டு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பெட்ரோல் எஞ்சின்களை ரெவோட்ரான் என்ற பெயரிலும், டீசல் எஞ்சின்களை ரெவோடார்க் என்ற பெயரிலும் குறிப்பிடுகிறது. அதேபோன்று, தனது மின்சார கார்களில் பயன்படுத்தப்பட இருக்கும் மின் மோட்டார் மற்றும் டிரான்ஸ்மிஷனை ஸிப்ட்ரான் என்ற பெயரில் அழைக்கிறது.

இந்த புதிய ஸிப்ட்ரான் தொழில்நுட்பம் அறிமுக நிகழ்வில் பேசிய டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்ட்டெர் பட்செக் கூறுகையில்," எலெக்ட்ரிக் கார்களுக்கான ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.

இந்த புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான ஸிப்ட்ரான் மின் மோட்டார் மற்றும் டிரான்ஸ்மிஷன் அமைப்பானது செயல்திறன் மிக்க ஓட்டுதல் அனுபவத்தையும், பசுமையை காக்கும் நுட்பமாகவும் இருக்கும். அரசின் மின்சார வாகன புரட்சிக்கு இந்த தொழில்நுட்பம் மிகுந்த உறுதுணையாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

புதிய ஸிப்ட்ரான் தொழில்நுட்பமானது டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரில் முதலாவதாக பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த கார்களில் லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 250 கிமீ தூரம் வரை செல்லும் திறன் பெற்றதாக இருக்கும்.

இந்த பேட்டரியானது லிக்யூடு கூல்டு சிஸ்டத்துடன் வர இருக்கிறது. இதன் சிறப்பான பேட்டரி மேலாண்மை தொழில்நுட்பமும் நீடித்த உழைப்பை வழங்கும். அதாவது, 8 ஆண்டுகள் வரை செயல்திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

இந்த காரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், பர்மெனென்ட் மேக்னெட் ஏசி மின் மோட்டார் பயன்படுத்தப்படும். மேலும், அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் சிறப்பான செயல்திறனை இதன் மின்னணு சாதனங்கள் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








