இந்திய மார்க்கெட்டில் இறங்கி அடிக்கும் டாடா... கார்களின் விற்பனை அதிகரிக்க காரணம் இதுதான்...
கடந்த 2018-19ம் நிதியாண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீப காலமாக தனது அனைத்து கார் மாடல்களின் டிசைனையும் மேம்படுத்து வருகிறது. வெறுமனே கார்களின் அழகை கூட்டுவதுடன் மட்டும் நின்று விடாமல், அவற்றின் தரம், பயணிகளுக்கு கிடைக்கும் சௌகரியம் ஆகிய அம்சங்களிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதன் விளைவாக டாடா கார்களின் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. யுக்திகளை மாற்ற தொடங்கியது முதலே டாடா நிறுவனத்திற்கு வளர்ச்சிதான்.

இதன்படி கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2018-19ம் நிதியாண்டிலும் டாடா மோட்டார்ஸ் நல்ல வளர்ச்சியை சந்தித்துள்ளது. அதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கார்களின் விற்பனை 12.18 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 2018-19ம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 2,10,143 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் முந்தைய 2017-18ம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்த கார்களின் எண்ணிக்கை 1,87,321 மட்டுமே.

ஒரு சில முன்னணி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் டாடா மோட்டார்ஸின் வளர்ச்சி விகிதம் சிறப்பானதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் கார்களின் விற்பனை எண்ணிக்கையில் மாருதி சுஸுகி என்ற ஜாம்பவானை பிடிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. டாடா கார்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைதான் என்றாலும், அவற்றின் முரட்டுத்தனமான தோற்றம் சராசரி இந்திய வாடிக்கையாளர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக போட்டி நிறுவனங்களின் கார்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய தொடங்கினர். இதன் காரணமாக தனது கார்களில் புதிய டிசைன் மொழியை புகுத்தியது டாடா. தற்போது டாடாவின் லைன் அப் புத்தம் புதிதாக காட்சியளிக்கிறது. அத்துடன் டாடாவின் யுக்திக்கு வெற்றியும் கிடைத்துள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் டாடா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு டியாகோ, நெக்ஸான் ஆகிய கார்கள் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன. புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியரின் பங்களிப்பும் முக்கியமானது. இந்த சூழலில் அடுத்த தலைமுறை டியாகோ காரை களமிறக்குவதற்கான பணிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு வருகிறது. அடுத்த தலைமுறை டியாகோ காரானது, டாடாவின் புதிய ஆல்பா பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளது. புதிய டாடா டியாகோ கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஸ்பை படங்கள் சமீபத்தில் வெளியாயின. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின் இந்த கார் தொடர்ந்து விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவின் இரண்டாவது பெஸ்ட் செல்லர் என்றால், அது நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவிதான். நெக்ஸானின் விற்பனையும் தொடர்ந்து நல்ல முறையில் இருந்து வருகிறது. என்றாலும் சமீப காலமாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட மாடல்கள், டாடா நெக்ஸானுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகின்றன. எனவே நெக்ஸான் காரையும் டாடா நிறுவனம் விரைவில் அப்டேட் செய்யவுள்ளது. அடுத்த தலைமுறை நெக்ஸான் காரும் டாடாவின் புதிய ஆல்பா பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்படவுள்ளது.

அதே நேரத்தில் டாடா நிறுவனம் சமீபத்தில்தான் டாடா ஹாரியர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய மார்க்கெட்டில் இன்ஸ்டன்ட் ஹிட் அடித்துள்ள டாடா ஹாரியர் காரானது, மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகிறது. டாடா ஹாரியர் காரின் பிரீமியம் வசதிகள், தனித்துவமான டிசைன் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன. டாடா மோட்டார்ஸின் வளர்ச்சி இத்துடன் நின்று விடப்போவதில்லை. வரும் மாதங்களில் டாடாவின் புதிய தயாரிப்புகள் இந்திய மார்க்கெட்டில் வரிசை கட்டி களமிறங்கவுள்ளன. எனவே விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








