ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்
டாடா நிறுவன கார்களின் விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது தள்ளாடி கொண்டிருக்கிறது. பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்களும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதில், இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில், 8,097 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 18,429ஆக இருந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை 56 சதவீதம் குறைந்திருப்பது தெரியவருகிறது. மாடல்கள் வாரியாக டாடா நிறுவனத்தின் விற்பனை நிலவரத்தை இனி பார்க்கலாம்.

அதிகம் விற்பனையாகும் டாடா நிறுவன கார் என்ற பெருமையுடன் டியாகோ (Tiago) தொடர்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 3,068 டியாகோ கார்களை டாடா விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில், அதாவது 2018 செப்டம்பரில் 8,377 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 63 சதவிகித சரிவாகும்.

மறுபக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,842 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. டாடா நிறுவனத்தின் மிக பிரபலமான காம்பேக்ட் எஸ்யூவி காரான நெக்ஸான் 34 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. புதிய போட்டியாளர்களான ஹூண்டாய் வெனியூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஆகியவை நெக்ஸானின் விற்பனையை முழுங்கி விட்டன.

ஹூண்டாய் வெனியூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களிடம் இருந்து டாடா நெக்ஸான் கடும் போட்டியை சந்தித்து வருகிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது. அதே சமயம் டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தற்போது தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இது அடுத்தாண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா நிறுவனம் களமிறக்கவுள்ளது. அனேகமாக நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 300 கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விலை 15-17 லட்ச ரூபாய்க்குள் இருக்கலாம். அதே நேரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் டாடா நிறுவனம் 941 ஹாரியர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மூலம் டாடா ஹாரியர் கடுமையான போட்டியை சந்தித்து கொண்டுள்ளது.

டாடா நிறுவனம் ஹாரியர் காரின் 7-சீட்டர் வேரியண்ட்டை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அடுத்த ஆண்டில் இந்த புதிய வேரியண்ட் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான 4வது டாடா கார் டிகோர் (Tigor).

737 டிகோர் கார்களை கடந்த மட்டுமே செப்டம்பர் மாதம் டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 60 சதவீத வீழ்ச்சியாகும். டாடா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 270 ஜெஸ்ட் கார்களையும், 12 போல்ட் கார்களையும் விற்பனை செய்துள்ளது. இது முறையே 84 மற்றும் 94 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

அதே நேரத்தில் டாடா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 148 ஹெக்ஸா கார்களை விற்பனை செய்துள்ளது. இது 79 சதவீத வீழ்ச்சி. பிஎஸ்-6 சகாப்தத்தில் டாடா சபாரி ஸ்ட்ரோம் காரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 79 வாடிக்கையாளர்கள் அந்த காரை தேர்வு செய்துள்ளனர்.

ஆட்டோமொபைல் துறையில் தற்போது நிலவி கொண்டுள்ள மந்தநிலையை மட்டும் டாடா நிறுவனத்தின் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூற முடியாது. அதனுடன் சேர்த்து போட்டி நிறுவனங்கள் அளிக்கும் சவாலும் ஒரு காரணமாகவே உள்ளது. டாடா நெக்ஸானின் போட்டியாளரான ஹூண்டாய் வெனியூ மற்றும் டாடா ஹாரியரின் போட்டியாளரான எம்ஜி ஹெக்டர் ஆகியவை விற்பனையில் அசத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








