டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் வழியை பின்தொடர்ந்த நம் நாட்டு ஜாம்பவான்: எதற்கு தெரியுமா?
பட்ஜெட் ரக கார்களைத் தயாரித்து வரும் டாடா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதமாக டொயோட்டா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களைத் தொடர்ந்து, ஓர் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

டொயோட்டா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களைத் தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் எளிதில் நுகரும் வகையில் ஸ்மார்ட்போன் ஆப்பினை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஆப்மூலம், டாடா நிறுவனம் பல்வேறு சேவைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது.

வாகன உற்பத்தியில் நாட்டின் மிகப்பெரிய ஜாம்பவனாக செயல்பட்டு வரும் டாடா நிறுவனம், பட்ஜெட் ரக வாகன தயாரிப்பில் தலை சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. அதேசமயம், இந்த நிறுவனம், பட்ஜெட் விலையில் அதிக பாதுகாப்பு நிறைந்த கார்களையும் விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.

அந்த வகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற கார் கிராஷ் டெஸ்டில், டாடா நெக்ஸான் கார் 5/5 ஸ்டார் என்ற ரேட்டிங்கைப் பெற்று, இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த கார் என்ற பெருமையை சூடியது. இதனால், சர்வதேச அளவில் இந்நிறுவனத்தின் மீதான தயாரிப்புகளுக்கு எதிர்பார்ப்பு நிலவ ஆரம்பித்துள்ளது. அதேசமயம், இந்திய தயாரிப்பு மீதும் சர்வதேச அளவில் ஓர் அதீத நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு, பல்வேறு சேவைகளைச் செய்து வரும் டாடா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்கள் எளிதில், அவர்களை நுகரும் வகையில் டாடா மோட்டார்ஸ் சர்வீஸ் கனெக்ட் (டிஎம்எஸ்சி) என்ற புதிய ஸ்மார்ட்போன் மென்பொருள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலம் டாடா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு கணிசமான சேவைகளை வழங்க இருக்கின்றது.

டாடா மோட்டார்ஸின் இந்த டிஎம்எஸ்சி ஆப்பானது, டாடா கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்களின் சில பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது. அந்தவகையில், இந்த வாகனத்தில் ஒரு முறை வாகனம் குறித்த தகவலை பதிவிட்டுக் கொண்டால், மற்ற அனைத்து தகவல்களையும் தானாகவே டாடா நிறுவனத்தின் டேட்டா பேஸில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளும்.

அவ்வாறு, வாகனத்தின் சேஸிஸ் நம்பர், வாரண்டி, ஏஎம்சி மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட தகவல்களை ஒரே பக்கத்தில் காண்பிக்கும். இதனால், எந்தவொரு தகவலையும் நொடிப்பொழுதில் விரல் நுனியில் பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், முக்கிய செய்திகள், கால சீதோஷ்ண நிலை, சலுகைகள், திட்டங்கள், சர்வீஸ் கேம்ப் மற்றும் புதிய தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் இந்த ஆப் கொடுக்க இருக்கின்றது.

அதேபோன்று, இந்த ஆப் கூடுதலாக காரின் மெயின்டெனென்ஸ் குறித்த டிப்ஸ் மற்றும் சிறு சிறு கோளாறுகளை தாங்களே எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்ளலாம் உள்ளிட்ட தகவல்களையும் இந்த ஆப் வழங்குகின்றது. இத்துடன், மிக முக்கியமாக சர்வீஸுக்கு புக் செய்யவும், பியூசி மற்றும் இன்சூரன்ஸைப் புதுப்பிக்கவும் இந்த ஆப்பில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. மேலும், பேட்டரி மற்றும் டயர் உள்ளிட்டவற்றை ரீபிளேஸ் செய்யவும் இந்த உதவும்.

இதைத்தொடர்ந்து, காரை டிராக் செய்யவும் இந்த ஆப் உதவுகிறது. கூட்டம் நெரிசலான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்ல நேர்ந்தால், அந்த இடத்தை ஜிபிஎஸ் மூலம் ஆப்பில் பதிவு செய்து கொண்டால், பின்னர் காரை கண்டுபிடிப்பதை சுலபமாக்கும். அதேசமயம், இதன் சிக்னல் துண்டிக்கப்பட்டால் உடனடிாக டாடாவின் ரோட் சைட் அசிஸ்டண்டுக்கு தகவலை பரிமாறும்.

இது காரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவும். இந்த தகவல் பரிமாற்றம் அந்த பகுதி மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து டாடா சர்வீஸ் மையங்களுக்கும் பரிமாறப்படும். ஆகையால், கார் தொலைந்துவிட்டால் கூட இந்த ஆப்பை வைத்து எளிதில் கண்டுபிடித்தலாம்.

இந்த ஆப் மூலம் அடுத்த சர்வீஸுக்கான நாளைக் கூட புக் செய்து கொள்ள முடியும். அத்துடன், சர்வீஸ் குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடியும். இத்துடன், சர்வீஸின் போது வழங்கப்பட்ட பில் சாஃப்ட் காப்பியாக இந்த ஆப்பில் காட்சியாகும். மேலும், சர்வீஸில் மாற்றம் செய்யப்பட்ட பொருட்களின் விபரங்களும் இதில் காண்பிக்கப்படும்.

டாடாவின் இந்த ஆப்பினை ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டார்களில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம். அதேசமயம், இந்த ஆப்பினை தற்போது வரை டாடா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுண்டலோடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications