புதிதாக 100 கார் விற்பனை நிலையங்களை திறக்கும் டாடா மோட்டார்ஸ்
நாடு முழுவதும் புதிதாக 100 விற்பனை நிலையங்களை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கார் விற்பனை பிரிவை தூக்கி நிறுத்துவதற்கு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையுடன் வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் 200 புதிய கார் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஏற்கனவே 100 புதிய விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 100 புதிய கார் விற்பனை நிலையங்களை திறக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு தலைவர் மாயங்க் பரீக் கூறுகையில்,"விற்பனை நிலையங்கள் கட்டமைப்பை விரிவாக்கம் செய்து வருகிறோம். புதிய இடங்களில் எமது ஷோரூம்களை திறப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

எங்களது கார் மாடல்களை பார்த்து டீலர்கள் வியப்பு தெரிவிப்பதுடன், புதிய இடங்களில் விற்பனை மையங்களை நிறுவுவதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 100 புதிய கார் ஷோரூம்களை திறப்பது வழக்கம். ஆனால், நடப்பு நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம் என்று மாயங்க் பரீக் தெரிவித்துள்ளார்.

தற்போது 860 கார் விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் வரும் மார்ச் மாதத்திற்குள் 960 விற்பனை நிலையங்கள் என்ற மிகப்பெரிய விற்பனை கட்டமைப்பை பெற இருக்கிறது. இது நிச்சயம் புதிய கார் மாடல்களை விற்பனை செய்வதற்கு ஏதுவானதாக அமையும்.

புதிய விற்பனை நிலையங்களை திறப்பதற்கான முயற்சிகளும், டீலர்களின் விண்ணப்பங்களை பரீசிலிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்த புதிய ஷோரூம்கள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார், நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் ஹாரியர் அடிப்படையிலான புதிய 7 சீட்டர் எஸ்யூவி உள்ளிட்ட பல புதிய மாடல்களை வரிசை கட்ட தயாராகி வருகிறது. இதற்கு வலுவான விற்பனை நிலையங்கள் கட்டமைப்பு அவசியமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








