ஐந்து நட்சத்திர கார்களை மட்டுமே இனி டாடா தயாரிக்கும்: இது டாடாவின் ஜெனிவா சபதம்...!
ஜெனிவா கார்கண்காட்சியில் பங்கேற்ற டாடா நிறுவனத்தின் தலைவர் குவேந்தர் பட்செக், இனி டாடா நிறுவனம் ஐந்து நட்சத்திரம் ரேட்டிங் கொண்ட கார்களை மட்டுமே தயாரிக்க இருப்பதாக தெரவித்தார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரத்தில் 89-வது சர்வதேச வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புத்தம் புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்த கண்காட்சியில் இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கலந்துக்கொண்டு, தனது புத்தம் புதிய நான்கு மாடல் கார்களை கடந்த செவ்வாய்கிழமை அன்று அறிமுகம் செய்தது. ஹாரியரின் மூத்த சகோதரரான பஸ்ஸார்ட் எஸ்யூவி, அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக், ஒரே சார்ஜில் 300 கிமீ தூரம் பயணிக்கும் அல்ட்ராஸ் மின்வாகனம் மற்றும் ஹேச்2எக்ஸ் கான்சப்ட் மாடல் ஆகிய கார்களை காட்சிக்கு வைத்திருந்தது.

இதைத்தொடர்ந்து, ஜெனிவா கார் கண்காட்சியில் பங்குபெற்ற அந்நிறுவனத்தின் தலைவர் குவேந்தர் பட்செக், "இனி டாடா நிறுவனம் ஐந்து நட்சத்திரம் கொண்ட கார்களை மட்டுமே தயாரிக்கும்" என தெரிவித்தார்.

டாடாவின் நெக்ஸான் எஸ்யூவி மாடலை குளோபல் என்சிஏபி அமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனையில் டாடா நெக்ஸான் கார் பயணிகளின் பாதுகாப்பில் 5 நட்சத்திர ரேட்டிங் பெற்று அசத்தியது. நெக்ஸானில் சீட் பெல்ட் ரிமைண்டர், ஏர்பேக், சைல்ட் ஐசோபிக்ஸ் சீட்ஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாதுகாப்பு குறித்து நெக்ஸானை கிராஷ் செய்து சோதனையிட்டதில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 13.56 புள்ளிகளும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 16.06 புள்ளிகளையும் பெற்று இந்தியாவின் பாதுகாப்பான கார் என்ற பட்டத்தை சுடியது. இந்த பாதுகாப்பின் சோதனையில் உச்ச வரம்பாக 17 புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நெக்ஸானின் இந்த வெற்றியை மற்ற கார்களும் வரவேற்றது. மேலும் இதுகுறித்து மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், டாடா நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், டாடாவின் இந்த வெற்றியை மஹிந்திராவும் பின்தொடரும் என்று கூறினார்.

உலக நாடுகள் முழுவதும் சாலை விபத்தில் இறப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இந்தியாவில் மட்டும் சராசரியாக 1.5 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் இறப்பதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலும் 18 முதல் 35 வயதுடைய நபர்களே அதிகமாக உள்ளனர். இத்தகைய சூழலில் இதுபோன்று பாதுகாப்பு நிறைந்த வாகனங்கள் இந்தியாவிலேயே உற்பத்திச் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.

5 நட்சத்திர ரேட்டிங்கிற்கு பிறகு டாடா நிறுவனத்தின் கார் விற்பனையானது கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக டாடா நிறுவனத்தின் பங்கானது 7 சதவீதம் அதகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, டாடா நிறுவனம் தனது புத்தம் புதிய தலைமுறை கட்டமைப்புகளான ஆல்பா மற்றும் ஒமேகா தயாரிப்புகளை அடுத்த 3 முதல் 5 வருடங்களில் இரு மடங்காக உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








