வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு!
வரும் ஜனவரி முதல் டாடா கார் விலை கணிசமாக அதிகரிக்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் கார் விலையை உயர்த்துவது குறித்து கார் நிறுவனங்கள் பரீசிலிப்பதும், உயர்த்துவதும் வழக்கமான விஷயம்தான். அந்த வகையில், புத்தாண்டு பிறக்கும்போது காரண, காரியம் இல்லாவிட்டாலும், கார் விலையை உயர்த்துவது கார் நிறுவனங்கள் கடைபிடிக்கும் சம்பிரதாயமான விஷயமாக மாறிவிட்டது.

அந்த வகையில், அண்மையில் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி ஜனவரி முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்த வழியை பின்பற்றி, நாட்டின் மிகப்பெரிய வாகன குழுமமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கார் மாடலுக்கும் எவ்வளவு விலை உயர்த்தப்பட இருக்கிறது என்பது குறித்து விரைவில் டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக 2 முதல் 3 சதவீதம் விலையை கார் நிறுவனங்கள் உயர்த்துவது வழக்கமாக இருக்கிறது.

குறிப்பாக, பிஎஸ்-6 எஞ்சின்களுடன் கார்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் நிச்சயம் விலை உயர்வு கணிசமாக அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. குறைந்தது ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கார் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக டாடா மோட்டார்ஸ் அதிகாரி மாயங்க் பரீக் தெரிவித்துள்ளார்.

கார் உற்பத்திக்கான செலவீனம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சின்களுடன் வருவதால் கார்களின் விலை நிச்சயம் மிக அதிகமாக விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹெக்ஸா, ஹாரியர் என அனைத்து கார் மாடல்களும் விலை உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. இதனிடையே, டாடா அல்ட்ராஸ் கார் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் அறிமுக விலை சலுகையுடன் வரும் என்பதால், போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








