அதிரடியாக 4 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் டாடா... நெக்ஸான் எலெக்ட்ரிக் காரும் உறுதியானது
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் அனைத்து கார் நிறுவனங்களுமே மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், புதிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

ஏற்கனவே, டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் எலெக்ட்ரிக் மாடல்களை உருவாக்கிவிட்டது. ஆனால், தனிநபர் பயன்பாட்டு சந்தைக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை பார்வைக்கு வைத்திருந்தது.

இதனால், எலெக்ட்ரிக் கார் உருவாக்கப் பணிகளை முழு வீச்சில் டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டு வருவது தெரிய வந்தது. இந்த சூழலில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மாடலும் உருவாக்கப்பட்டு வருவதை டாடா மோட்டார்ஸ் உறுதி செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்கள் மத்தியில் பேசிய குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்,"அடுத்த 18 மாதங்களில் 4 புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம்.. அல்ட்ராஸ், நெக்ஸான் மற்றும் மேம்படுத்தப்பட்ட டியாகோ எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார். ஆனால், 4 வது மாடல் குறித்த தகவல் இல்லை.

அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்டவற்றை நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடலிலும் பயன்படுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கார் 250 முதல் 350 கிமீ தூரம் பயணிக்கும் திறனை பெற்றிருக்கும்.

இந்த காரில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட இருக்கிறது. ஆனால், எடை காரணமாக அல்ட்ராஸ் காரைவிட நெக்ஸான் காரின் ரேஞ்ச் சற்றே குறைவாக இருக்கும். நடைமுறை பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த அம்சங்களுடன் இந்த 4 புதிய கார்களையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

தற்போது டிகோர் எலெக்ட்ரிக் கார் அரசுத் துறை பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய அல்ட்ராஸ், நெக்ஸான், டியாகோ ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் மாடல்கள் தனிநபர் சந்தையை குறிவைத்து களமிறக்கப்படும்.

எலெக்ட்ரிக் கார்களுக்கான ஊக்குவிப்புத் திட்டங்களை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதனால், வாடிக்கையாளர்களின் கவனம் எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. எனவே, அடுத்து வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications