பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...
டாடா டியாகோ கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கார்களை வாங்கும் இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது பாதுகாப்பு என்ற விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். எனவே அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு தங்கள் மாடல்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றன.

இதில், இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் முக்கியமானது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான கார்களை வழங்க வேண்டும் என டாடா நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இதற்கேற்ப சிறப்பான கட்டுமான தரத்துடன் கூடிய கார்களை டாடா உற்பத்தி செய்து வருகிறது.

டாடா நிறுவனத்தின் நெக்ஸான்தான் குளோபல் என்சிஏபி கிராஸ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர டாடா நிறுவனத்தின் ஹாரியர், ஹெக்ஸா உள்ளிட்ட கார்களும் விபத்தில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளன.

இந்த சூழலில் டாடா நிறுவனத்தின் டியாகோ (Tata Tiago) கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தற்போது டியாகோ காரை டாடா நிறுவனம் ஸ்டாண்டர்டு பாதுகாப்பு வசதிகளுடன் அப்டேட் செய்துள்ளது.

ட்யூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள், ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் (இபிடி), கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (சிஎஸ்சி) மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் டாடா டியாகோ காரில் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர கூடுதலாக சீட் பெல்ட் மற்றும் ஸ்பீடு சென்சிங் அலர்ட் சிஸ்டமும் டாடா டியாகோ காரில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்டுள்ள டாடா டியாகோ கார் தற்போது 4.40 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) கிடைக்கும்.

அதேசமயம் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.05 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் டாடா டியாகோ கார் தொடர்கிறது. இந்த சூழலில் டீசல் வெர்ஷனை ஒருவேளை டாடா நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎஸ்-6 (BS-VI) மாசு உமிழ்வு விதிமுறைகளை இதற்கு காரணம். மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








