உலக பாதுகாப்புத் தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் டாடா டியாகோ கார்?
க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளில் 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெறும் விதத்தில், டாடா டியாகோ காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குளோபல் என்சிஏபி நடத்திய க்ராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்தியாவின் முதல் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எஸ்யூவி பெற்றது.

இந்த நிலையில், இதர கார்களிலும் பாதுகாப்பு அம்சங்களையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. அதன்படி, க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டு புள்ளிகளை பெறும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

டாடா டியாகோ காரில் ஸ்பீடு சென்சிங் டோர் லாக்கிங் சிஸ்டம் என்ற வசதி இருப்பது தெரிந்த விஷயம்தான். இந்த நிலையில், டியாகோ காரின் எக்ஸ்இசட் என்ற வேரியண்ட்டிலிருந்து இந்த வசதி அண்மையில் நீக்கப்பட்டுள்ளது.

கார் குறிப்பிட்ட வேகத்தை கடக்கும்போது அனைத்து கதவுகளும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் முறையில் தானியங்கி முறையில் பூட்டிக் கொள்ளும். இந்த வசதியை டாடா மோட்டார்ஸ் நீக்கி இருப்பது வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டாடா டியாகோ காரை அண்மையில் வாங்கிய ரோஹன் பிரகாஷ் என்பவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ட்விட்டர் மூலமாக வினவியுள்ளார்.

இதற்கு ட்விட்டர் மூலமாக பதில் அளித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெறும் வகையில், இந்த ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக் வசதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, கார் விபத்தில் சிக்கும்போது கார் கதவுகள் முற்றிலுமாக திறக்க முடியாத அளவுக்கு பூட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஓட்டுனர் பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் தனி பட்டன் மூலமாக அனைத்து கதவுகளையும் ஒரே நேரத்தில் பூட்டுவதற்கும், திறப்பதற்கும் இயலும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு சிலர் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் உள்ள குறிப்பிட்ட வசதி ஆட்டோ லாக் ஆப்ஷனை மீண்டும் செயலுக்கு கொண்டு வரமுடியும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், டாடா மோட்டார்ஸ் அண்மையில் வழங்கி இருக்கும் புதிய அப்டேட் மூலமாக இந்த வசதியை வாடிக்கையாளர்கள் மீட்டெடுக்க முடியாது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் மூலமாக, டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு அடுத்ததாக, க்ராஷ் டெஸ்ட்டில் டியாகோ காருக்கு 5 நட்சத்திர மதிப்பீடு பெறும் அளவுக்கு பாதுகாப்பு தரத்தில் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. ஒருவேளை, குளோபல் என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட் நடத்தி முடிவுகளை வெளியிடும்போது, இது அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

பொதுவாகவே, டாடா நெக்ஸான், டியாகோ கார்கள் சிறந்த கட்டமைப்பு வசதிகளை கொண்ட கார் மாடல்களாக வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், டியாகோ காரில் பல புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 5 நட்சத்திர மதிப்பீட்டுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விரைவில் சில அதிகாரப்பூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம்.

கடந்த மார்ச் மாதம் டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், தனது அனைத்து கார்களையுமே 5 தர மதிப்பீட்டுக்கு இணையாக பாதுகாப்பை மேம்படுத்த இருப்பதாக தெரிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது.
Source: Rohan Prakash


Click it and Unblock the Notifications








