டாடா நானோ கார் சகாப்தம் முடிவுக்கு வருகிறது!
அடுத்த ஆண்டு ஏப்ரலுடன் டாடா நானோ காரின் உற்பத்தி முடிவுக்கு வர இருக்கிறது. அதாவது, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்துடன் எஞ்சினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் கார் நிறுவனங்களுக்கு ஏ
டாடா நானோ கார் உற்பத்தி முடிவுக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதன் விபரங்களை பார்க்கலாம்.

உலகின் மலிவு விலை கார் என்ற பெருமையுடன் 2008ம் ஆண்டு அறிமுகமான டாடா நானோ கார் துவக்கத்தில் மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், மொக்கையான டிசைன், திறன் குறைந்த எஞ்சின் போன்ற அம்சங்கள் இந்த காருக்கான மதிப்பை இழக்க செய்தது.

இந்த காருக்கு பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டதால், பொருளாதார இழப்பையும் நானோ கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்தது. எனினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு தயாரிப்பு என்பதை கருதி, இந்த காரை வெற்றி பெற வைப்பதற்கான கடும் பிரத்யேனங்களை டாடா மோட்டார்ஸ் எடுத்தது.

ஆனால், அதற்கு போதிய பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில், நானோ கார் உற்பத்தியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவு தலைவர் மாயங்க் பரீக் கூறுகையில்," அடுத்த ஓர் ஆண்டிற்குள் கார்களின் பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு குறித்த பல்வேறு புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருக்கின்றன.

தற்போது விற்பனையில் இருக்கும் சில மாடல்கள் இந்த புதிய விதிமுறைகளுக்கு ஒப்பானதாக இருக்காது. அந்த கார்களை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்யும் எண்ணமில்லை. அதில், நானோ காரும் ஒன்று என்று அவர் கூறி இருக்கிறார்.

இதனால், அடுத்த ஆண்டு ஏப்ரலுடன் டாடா நானோ காரின் உற்பத்தி முடிவுக்கு வர இருக்கிறது. அதாவது, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்துடன் எஞ்சினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் கார் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஒப்பானதாக காரின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நுட்பங்களையும் மேம்படுத்த வேண்டி இருக்கிறது. இதற்காக கார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

இதனை தவிர்ப்பதற்காக, பழைய மாடல்களுக்கு கல்தா கொடுக்க பல கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அந்த வகையிலேயே, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் நானோ காரை மேம்படுத்த விரும்பவில்லை. அதன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

ஒரு லட்ச ரூபாய் கார் என்ற தாரக மந்திரத்துடன் ஆட்டோமொபைல் துறையை திரும்பி பார்க்க வைத்த டாடா நானோ கார் ரத்தன் டாடாவின் கனவில் உருவான மாடல். இருசக்கர வாகனத்தில் செல்லும் இந்தியர்களுக்கு, அதே விலையில் காரை வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், அது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. தற்போது டாடா கார் அஸ்தமனத்தை நோக்கி செல்கிறது.


Click it and Unblock the Notifications








