சர்வதேச அளவில் இந்தியாவை தலை நிமிர செய்த டாடா நெக்ஸான்... மாருதி பிரெஸ்ஸாவிடம் வீழ்வது ஏனோ?
சர்வதேச அளவில் இந்தியாவை தலை நிமிர செய்த டாடா நெக்ஸானின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் டாடா நெக்ஸானால் இன்னும் மாருதி பிரெஸ்ஸாவை மட்டும் நெருங்க கூட முடியவில்லை.

குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமை டாடா நெக்ஸானையே (Tata Nexon) சாரும். டாடா நிறுவனம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய இந்த தகவலை, குளோபல் என்சிஏபி அமைப்பு, கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

மிக பாதுகாப்பான கார் என்று குளோபல் என்சிஏபி அமைப்பு சான்று வழங்கியதன் எதிரொலியாக, டாடா நெக்ஸானின் விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்க தொடங்கியது. அதாவது டாடா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெக்ஸான் கார்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது. 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பாக டாடா நிறுவனம் ஒரு முறை கூட ஒரே மாதத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெக்ஸான் கார்களை விற்பனை செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டாடா நிறுவனம் 5,095 நெக்ஸான் கார்களை விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 5,263ஆக அதிகரித்தது. இந்த சூழலில் கடந்த மார்ச் மாதத்தில் டாடா நிறுவனம் 5,616 நெக்ஸான் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை 5,500 யூனிட்களை கடப்பது இதுவே முதல் முறை.

ஒவ்வொரு மாதமும் டாடா நெக்ஸானின் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு மாதமும் விற்பனையில் புதிய சாதனை படைக்கப்படுகிறது. கிராஸ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் இந்திய கார் என்ற போதிலும் கூட, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப் 4 மீட்டர் எஸ்யூவி என்ற மகுடம் மட்டும் டாடா நெக்ஸானுக்கு இன்னும் கிட்டவில்லை.

அந்த மகுடம் மாருதி பிரெஸ்ஸாவிடமே (Maruti Brezza) தொடர்கிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான மாருதி பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே டாடா நெக்ஸானுக்கு இரண்டாவது இடம்தான். அடுத்தடுத்த இடங்களை முறையே மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300), ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் (Ford EcoSport), ஹோண்டா டபிள்யூஆர்வி (Honda WRV) மற்றும் மஹிந்திரா டியூவி300 (Mahindra TUV300) ஆகிய கார்கள் உள்ளன. இந்த செக்மெண்ட்டில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி (Hyundai Venue SUV) விரைவில் கால் பதிக்கவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார் வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், டாடா நிறுவனம் தற்போது நெக்ஸான் காரை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது முழுவதும் உருமறைக்கப்பட்ட நிலையில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் ஸ்பை படங்கள் சமீபத்தில் வெளியாயின. தற்போதைய தலைமுறை மாடலை போல் அல்லாமல், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது ஆல்பா (ALFA) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

தற்போதைய தலைமுறை மாடல் எக்ஸ்ஓ (XO) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் வரவுள்ள அனைத்து டாடா கார்களும் ஆல்பா அல்லது ஒமேகா (OMEGA) பிளாட்பார்ம்கள் அடிப்படையில்தான் உருவாக்கப்படவுள்ளன. கார்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறும் டாடா நிறுவனத்தின் முயற்சி இது.

இதனிடையே தற்போது மாடலில் உள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள்தான், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் இடம்பெறவுள்ளன. இதன் 1,198 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 108.5 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே சமயம் 1,497 சிசி, 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 108.5 பிஎச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது. ஆனால் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்ஜின்கள், எதிர்வரும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில் ட்யூன் செய்யப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








