ரூ.4,000 கோடியில் எலெக்ட்ரிக் கார் பேட்டரி தயாரிப்பு ஆலையை அமைக்கும் டாடா!
ரூ.4,000 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் கார் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு அனைத்து கார் நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமான டாடா மோட்டார்ஸ் பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு அதீத முக்கியத்துவம் அளித்து வருகிறது.

ஏற்கனவே, எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை துவங்கிவிட்டாலும், அதனை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சரியான விலையில் தருவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி, தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியின் விலைதான் அதிகமாக உள்ளது.

இதனை குறைக்கும் விதமாக, லித்தியம் அயான் பேட்டரியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய லித்தியம் அயான் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலம், தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் இந்த புதிய பேட்டரி ஆலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அந்த சிறப்பு முதலீட்டு மண்டலத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்," தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் லித்தியம் அயான் பேட்டரி ஆலையை டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. இதற்காக, 126 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் 10 ஜிகாவாட் பேட்டரியை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதற்காக முதல்கட்டமாக ரூ.1,000 கோடியை முதலீடு செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதனை படிப்படியாக விரிவாக்கம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் அமைக்கப்படும் டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு மிக குறைவான விலையில் மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், எலெக்ட்ரிக் கார் பேட்டரி தயாரிப்புக்கு மத்திய அரசும் பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்க இருக்கிறது.

இதனால், லித்தியம் அயான் பேட்டரியை வாங்குவதைவிட டாடா மோட்டார்ஸ் சொந்தமாக உற்பத்தி செய்வதன் மூலமாக விலை கணிசமாக குறையும். இதனால், எலெக்ட்ரிக் கார்களின் விலையை மிக சரியாக நிர்ணயிக்கும் வாய்ப்பு டாடா மோட்டார் நிறுவனத்திற்கு கிட்டும்.

அடுத்த சில ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் விலையில் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் வழங்குவதற்கான வாய்ப்பை இந்த புதிய லித்தியம் அயான் பேட்டரி ஆலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








