எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான 500 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் டாடா பவர்!
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான 500 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை டாடா பவர் நிறுவனம் அமைக்க உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. ஆனால், அதற்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் கட்டமைப்பு மிக பரந்த அளவில் தேவைப்படுகிறது. இதுவே அடிப்படையான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் கட்டமைப்பை விரிவுப்படுத்துவதற்கு அனைத்து வாகன மற்றும் இது சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. அந்த வகையில், டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் டாடா பவர் நிறுவனம் நாட்டின் முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க உள்ளது.

டாடா பவர் நிறுவனத்தின் புதிய வர்த்தகங்களுக்ககான தலைவர் ரமேஷ் சுப்ரணியம் கூறுகையில்,"தமிழகத்தில் ஓசூர் உள்பட பெங்களூர், மும்பை, புனே, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 85 சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் 500 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை கட்டமைக்க முடிவு செய்துள்ளோம்," என்று கூறினார்.

மேலும், மஹாராஷ்டிராவை பொறுத்தவரையில், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.6 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காலை மற்றும் பரபரப்பான வேலை நேரங்களில் யூனிட்டுக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படும். இரவுநேரங்களில் 75 பைசா வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படும்.

எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையங்களை எளிதாக தெரிந்துகொள்ளும் விதத்தில், பிரத்யேக மொபைல்போன் அப்ளிகேஷனை வெளியிடவும் டாடா பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா பவர் சார்ஜ் நிலையங்களில் சாதாரண மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஃபாஸ்ட் சார்ஜர்கள் மூலமாக குறைவான நேரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களே சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் சொந்தமாக சார்ஜ் ஏற்றும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். முதல்கட்டமாக உதவியாளர் பயன்படுத்தப்படலாம். ஆனால், நீண்ட கால அளவில் பணியாளர்கள் வைத்து இயக்கும் திட்டம் இருக்காது என்றும் ரமேஷ் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
Source: News18 Auto


Click it and Unblock the Notifications








