டாடா சுமோ காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!
இந்தியர்களின் போக்குவரத்தில் முக்கிய அங்கம் வகித்த, டாடா சுமோ எஸ்யூவி கார் விற்பனையிலிருந்து அடியோடு விலக்கப்பட்டுவிட்டது.

அம்பாசடர் கார் போலவே, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற என அனைத்து தரப்பு மக்களின் போக்குவரத்தில் மிக முக்கிய அங்கம் வகித்த கார் டாடா சுமோ. கரடுமுரடான சாலைகளிலும் அனாயசமாக செல்வதுடன், பழைய கார்களிலிருந்து பயணிகளுக்கு ஓரளவு சொகுசான பயணத்தை வழங்கியதில், டாடா சுமோவுக்கு முக்கிய பங்கு உண்டு.

கிராமப்புறங்களில் அதிக அளவில் தனிநபர் மற்றும் வாடகை கார் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. நகர்ப்புறத்தில் பல நிறுவனங்களில் பணியாளர்களை பிக்கப் டிராப் செய்வதற்கும் இந்த கார் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

குறைவான விலை, எளிதான பராமரிப்பு, அதிக எரிபொருள் சிக்கனம், அருமையான டிசைன் என ஜனரஞ்சகமான எஸ்யூவி மாடலாக பெயர் பெற்றிருந்தது. தனிநபர் சந்தை மற்றும் வாடகை கார் உரிமையாளர்களின் உற்றத் தோழனாகவும் விளங்கியது.

இந்த நிலையில், புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஒப்பாக டாடா சுமோ காரை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதுடன் விலை அதிகரித்தால், அதற்கான சந்தை வாய்ப்பு எந்த அளவுக்கு பிரகாசமாக இருக்கும் என்று தெரியவில்லை.

எனவே, டாடா சுமோ காருக்கு விடை கொடுத்துவிட்டது டாடா மோட்டார்ஸ். கடந்த 25 ஆண்டு காலமாக மக்கள் சேவையில் இருந்த கார் இனி டீலர்களில் விற்பனைக்கு கிடைக்காது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லையென்றாலும், டீலர்கள் மூலமாக தகவல் உறுதியாகி இருக்கிறது.

டாடா சுமோ கோல்டு காரில் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்து வந்தது.

இந்த 7 சீட்டர் எஸ்யூவி வகை கார் நடைமுறை பயன்பாட்டுக்கு மிகச் சிறப்பாக இருந்ததே வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. ஆனால், புதிய பாதுகாப்பு விதிகளும், மாசு விதிகளும் டாடா சுமோ காருக்கு கட்டாய ஓய்வை கொடுத்துவிட்டன. இதே வரிசையில், மேலும் பல மாடல்கள் விடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








