புதிய 8 சீட்டர் எம்பிவி காரை களமிறக்குவது குறித்து டாடா பரிசீலனை!
புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதில் டாடா மோட்டார்ஸ் அதிரடி காட்டி வருகிறது. எஸ்யூவி, எலெக்ட்ரிக் கார் மாடல்களை வரிசை கட்ட துவங்கி இருக்கும் அந்நிறுவனம், அடுத்து எம்பிவி கார் மாடலையும் களமிறக்கும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜெனிவாவில் நடந்து வரும் சர்வதேச மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அல்ட்ராஸ், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் எச்2எக்ஸ் கான்செப்ட் ஆகிய கார் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் அந்நிறுவனத்தின் அல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா பிளாட்ஃபார்மில் வெவ்வேறு ரகத்தில் புதிய மாடல்களை உருவாக்குவதற்கான மோடுலர் எனப்படும் வேறுபட்ட பரிமாணம் மற்றும் டிசைன் மொழியில் கார்களை உருவாக்கும் கட்டமைப்பு கொள்கையை கொண்டது.

டாடாவின் புதிய அல்ஃபா பிளாட்ஃபார்மில் 4.3 மீட்டர் நீளமுடைய கார் மாடல்களை உருவாக்க முடியும். ஆனால், டாடாவின் மற்றொரு புதிய ஒமேகா பிளாட்ஃபார்மில் 4.3 மீட்டர் முதல் 4.8 மீட்டர் வரையிலான நீளமுடைய கார்களை உருவாக்க முடியும்.

டாடாவின் புதிய ஒமேகா பிளாட்ஃபார்மில்தான் பஸ்ஸார்டு எஸ்யூவி கான்செப்ட் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த பிளாட்ஃபார்மில் புதிய 5 சீட்டர் எஸ்யூவி, 7 சீட்டர் எஸ்யூவி மாடல்களையும், 7 அல்லது 8 சீட்டர் எம்பிவி கார் மாடலையும் உருவாக்க முடியும்.

அதன்படி, ஒமேகா பிளாட்ஃபார்மின் அடிப்படையில் புதிய 8 சீட்டர் எஸ்யூவி மாடலையும், ஹாரியர் கூபே ரக எஸ்யூவி மாடலையும் உருவாக்குவது குறித்து டாடா மோட்டார்ஸ் பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய எம்பிவி ரக கார் மாடல் மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு நேரடி போட்டியாகவும், கூபே ரக எஸ்யூவி மாடலானது ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியான ரகத்திலும் நிலைநிறுத்தப்படும்.

இந்த இரண்டு கார் மாடல்களும் தற்போது டிசைன் செய்யும் ஆரம்ப பணிகளில் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த இரண்டு கார்களின் கான்செப்ட் மாடல்களும் 2020ம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








