டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுக விபரம்!
டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

நடப்பு தசாப்தத்தின் இறுதி கட்டத்தை எட்டி கொண்டிருக்கும் இந்த வேளையில், அடுத்த தசாப்தத்தில் வாகன சந்தை புதிய பரிமாணத்தை நோக்கி பயணப்பட இருக்கிறது. அடுத்த தசாப்தத்தில் எலெக்ட்ரிக் கார்களின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்பது தெரிந்த விஷயம்.

இதனை மனதில் வைத்து வாகன நிறுவனங்கள் மின்சார வாகனங்களை களமிறக்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

தற்போது டாடா டிகோர் கார் அரசு அமைப்புகளுக்கான பயன்பாட்டிற்காக சப்ளை செய்யப்படுகிறது. இந்த கார் தனிநபர் பயன்பாட்டு சந்தையிலும் விரைவில் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து, டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் மாடலும் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது.

அடுத்த ஆண்டு டாடா டியாகோ காரின் மின்சார மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டாடா ஹாரியர் அறிமுக விழாவின்போது மணிகன்ட்ரோல் தளத்திற்கு பேட்டியளித்த டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்ட்டர் பட்செக் குறிப்பிடுகையில், அடுத்த ஆண்டு மின்சார கார் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

ஆனால், தற்போது அதுகுறித்த முடிவுகள் எதுவும் கையில் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். அவர் கூறியிருப்பதை வைத்து பார்க்கும்போது அது டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.

எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்போது, மின்சார கார் மாடலை அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணம் அனைத்து வாகன நிறுவனங்களுக்குமே உள்ளது. இதற்கான முயற்சிகளிலும் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

எனினும், அடுத்த ஆண்டு டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஆரம்பத்தில் விற்பனை எண்ணிக்கையை கருத்தில்கொள்ளாமல், சந்தையில் கால் பதித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட உள்ளது.

கடந்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் கார் மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 85 kW எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

இந்த காரில் இருக்கும் லித்தியம் அயான் பேட்டரி மூலமாக 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு வர இருக்கும் மாடலில் அதிக தூரம் பயணிக்கும் திறனை வழங்கும் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது..

அடுத்த ஆண்டு மாருதி கார் நிறுவனமும் மின்சார கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. வேகன் ஆர் காரின் மின்சார மாடலை அந்நிறுவனம் களமிறக்க முடிவு செய்துள்ளது. அதன்படியே, தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் போட்டியாக டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








