இந்தியர்களின் 21 ஆண்டு கால கனவு கார்... மார்க்கெட்டை புரட்டி போட களம் இறங்குகிறது புதிய டாடா சபாரி
போட்டி நிறுவனங்களின் மார்க்கெட்டை ஒரே அடியில் காலி செய்யும் வகையில், இந்தியர்களின் 21 ஆண்டு கால கனவு காரான புத்தம் புதிய சபாரியை களத்தில் இறக்க டாடா முடிவு செய்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்று சபாரி (Tata Safari). இந்திய வாடிக்கையாளர்கள் மனதில் டாடா சபாரி காருக்கு எப்போதும் மிக நெருக்கமான இடம் உண்டு. டாடா சபாரி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 21 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த 1998ம் ஆண்டில்தான் சபாரி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 21 ஆண்டுகளை கடந்த பின்பும் கூட, டாடா சபாரி காரின் புகழ் கொஞ்சமும் மங்கவில்லை. இன்றளவும் போட்டியாளர்களுக்கு சவால் அளித்து வருகிறது டாடா சபாரி.

டாடா சபாரி காரானது, எஸ்யூவி (SUV) வகையை சேர்ந்தது ஆகும். இதன் அட்டகாசமான ஸ்டைல், சிறப்பான இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் சௌகரியமான வசதிகள் ஆகியவைதான் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த அளவிற்கு புகழ்பெற முக்கிய காரணங்கள்.
சொல்லப்போனால் டாடா சபாரி கார்தான் இந்தியாவின் முதல் லக்ஸரி எஸ்யூவி (Luxury SUV). லக்ஸரி என்றால் என்ன? என்பதை, அவ்வளவாக வசதிகள் இல்லாத அந்த கால கட்டத்திலேயே இந்திய வாடிக்கையாளர்களுக்கு உணர வைத்த கார் இதுதான்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 21 ஆண்டுகள் கடந்துள்ள சூழலில் தற்போது ஸ்ட்ரோம் (Tata Safari Storme) என்ற ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது. இதற்கு முன்பாக டாடா சபாரி காரின் டைகோர் (DICOR) என்ற மாடல் விற்பனையில் இருந்தது.
ஆனால் அதன் உற்பத்தியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே டாடா மோட்டார்ஸ் நிறுத்தி விட்டது. எனவே தற்போது டாடா சபாரி ஸ்ட்ரோம் மாடல் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 2.2 லிட்டர், 4-சிலிண்டர், டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது அதிகபட்சமாக 156 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்கி, சாலைகளில் சீறி பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது. புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கிடைக்கும் மிக சிறப்பான ஆஃப் ரோடு வாகனங்களின் பட்டியலில், டாடா சபாரி ஸ்ட்ரோம் காருக்கும் நிச்சயம் இடம் உண்டு. இதன் விற்பனை தொடர்ந்து நல்ல நிலையில் இருந்து வருவதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, கடந்த 2018ம் ஆண்டில் மொத்தம் 6,138 சபாரி ஸ்ட்ரோம் கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 42 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.
டாடா சபாரி ஸ்ட்ரோம் காரின் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை இதன் சமீபத்திய சேல்ஸ் ரிப்போர்ட்டும் உறுதி செய்கிறது. அதாவது கடந்த ஜனவரி மாதம் மட்டும் 439 சபாரி ஸ்ட்ரோம் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்தாண்டு இதே மாதத்தில் (2018 ஜனவரி) வெறும் 346 சபாரி ஸ்ட்ரோம் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், டாடா சபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தற்போது உள்ள சபாரி ஸ்ட்ரோம் கார்களின் உற்பத்தியை, டாடா மோட்டார்ஸ் வெகு விரைவில் நிறுத்த உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாரி ஸ்ட்ரோம் கார்கள் கைவிடப்பட இருப்பது அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் (Safety Norms) விரைவில் அமலுக்கு வரவுள்ளன. தற்போது உள்ள டாடா சபாரி ஸ்ட்ரோம் கார், இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்காது. எனவேதான் அதன் உற்பத்தியை நிறுத்தி விட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் வரும் காலங்களில் புதிய தலைமுறை சபாரி காரை டாடா மோட்டார்ஸ் களமிறக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் சபாரி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. இந்த சூழலில் புதிய தலைமுறை சபாரி குறித்த முதற்கட்ட தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.

ஹாரியர் எஸ்யூவி காரை, டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது ஒமேகா (OMEGA) என்ற பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ஒமேகா பிளாட்பார்ம், லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் டி8 (D8) பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், கார்கள் உருவாக்கப்படும் பிளாட்பார்ம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் விரும்புகிறது. எனவே ஹாரியரை போல், ஒமேகா பிளாட்பார்ம் அடிப்படையில்தான் புதிய தலைமுறை சபாரி காரும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டைல் என்கிற அடிப்படையில் பார்த்தால், தற்போது உள்ள மாடலை போன்றுதான், அடுத்த தலைமுறை சபாரி காரும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவலால் டாடா சபாரி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் மத்தியில் தற்போதே ஆவல் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications









