பெட்ரோல், டீசல் காருக்கு பை பை சொல்லுங்க: வருகிறது டாடாவின் பட்ஜெட் கார்கள்...?
பட்ஜெட் கார்களை தயாரித்து வரும் டாடா நிறுவனம் தனது அனைத்து மின்வாகனங்களையும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டின் சர்வதேச கார் கண்காட்சி ஜெனிவாவில் நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 7ம் தேதி தொடங்கும் இத்திருவிழா 17 மார்ச் வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சர்வதேச கார் கண்காட்சிக்காக வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.

அதன்படி, புதிய தயாரிப்புகளையும், அப்கிரேட் செய்யப்பட்ட மாடல் கார்களையும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. மேலும், இந்த கண்காட்சியில் அடுத்த தலைமுறை வாகனங்களான மின்சார வாகனங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணியில் கார் நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், டாடா நிறுவனமும் அதன் வருங்கால மின்சார ரக கார்களை இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, அந்நிறுவனம் தனது நான்கு புதிய கார்களை கண்காட்சியில் காட்சிப்படுத்த இருக்கிறது. அதற்காக, தற்போது டாடா 45X பெரிய ஹாட்ச்பேக் மாடல் காரை தயார் அந்நிறுவனம் தயார் செய்துவருகிறது.

இதுகுறித்து, டாடா நிறுவனத்தின் மின்வாகனத்துறையின் தலைவர் ஷைலேஷ் சந்த்ரா கூறியதாவது, "இந்தியா மின்சார வாகனத்தை தயாரிக்க 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு மேலாகும் என முன்னதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அதனை தகர்த்தெறியும் விதமாக டாடா நிறுவனம் இன்னும் 2 வருடங்களுக்கு உள்ளாகவே தனது அடுத்த தலைமுறை மின்வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்துவிடும். இதன்மூலம், கூடிய விரைவிலேயே இந்தியர்கள் பட்ஜெட் ரக மின்வாகனங்களில் பயணம் செய்ய இயலும்.

தற்போது டாடா நிறுவனம் தயாரித்து வரும் மின்வாகனங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை செல்லும் வகையில் பேட்டரி பேக்அப் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முன்னதாக சந்தையில் உள்ள கார்கள் ஆரம்பத்தில் 140 கிமீ தூரம் செல்லக்கூடியதாவும், பின்னர் 200 கிமீ தூரம் செல்லக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டது. இவற்றை உடைத்தெரியும் வகையில் டாடா அதிக கிமீ செல்லும் வகையில் மின்வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் சிலர் 300-400 கிமீ தூரம் வரைச் செல்லக்கூடிய கார்களை தயாரிக்க வேண்டும் என அவர்களது விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஆனால், அதிக தூரம் செல்லக்கூடிய கார்களை அதிக செலவில் வாங்க நேரிடும்" என கருத்து தெரிவித்தார்.

இதைத்தொடர்நது பேசிய அவர், "டாடா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு ஏற்கனவே புக்கிங் குவிந்து வருகின்றது. அதன்படி, இஇஎஸ்எல் (EESL) நிறுவனம் சுமார் 5 ஆயிரத்து 50 பேட்டரி கார்களுக்கு முன்பதிவு செய்துள்ளது. அதேப்போன்று, வாடைக கார் நிறுவனமான ஜும் கார் 500 கார்களை வாங்க உள்ளது.
இன்னும் 4 முதல் 5 ஆண்டுகளில் மின் வாகனங்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள சாலைகளை ஆள உள்ளது. இந்த பணியில் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் பங்கேற்கும்" என்றார்.

மின்வாகன சந்தையில் முக்கிய பங்கை வகிக்கும் இலக்காக டாடா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்காக பட்ஜெட் விலையில் தரமான வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருவதாக டாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது வாகனச் சந்தையை விரிவாக்கம் செய்யும் வகையில் 20 முதல் 25 நகரங்களில் மின்வாகனங்களுக்கு தேவையான மையங்களை உருவாக்கி வருகின்றது. இதன்மூலம், அதிகம் மாசடைந்து வரும் நகரங்களின் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட இருப்பதாக அந்த நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

டாடா நிறுவனம் பிரிமீயம் ஹேட்ச்பேக் டிசைனில் நுழையும் விதமாக இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கன்வென்ஸனல் எஞ்ஜின் மூலம் பவரூட்டப்பட்ட டாடா 45X-யை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டாடா 45X ஆனது மாருதி சுஸுகியின் பலினோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








