ஆனந்த் மஹிந்திரா மட்டும் இந்த வேண்டுகோளை ஏற்றால்.. டெஸ்லா சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டுவிடும்!
ஹைட்ரஜன் கார்கள் குறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த வகை கார்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆனந்த் மஹிந்திராவுக்கு ட்விட்டர் மூலமாக சஞ்சய் சுவாமி என்ற இளம் தொழிலதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மின்சார கார்களுக்கு முக்கியத்துவம்
பெருநகரங்களில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான ஒரே தீர்வாக பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்கள் பார்க்கப்படுகின்றன. அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் மின்சார வாகனத் தயாரிப்புக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக, கார் நிறுவனங்கள் மின்சார கார் தயாரிப்புக்கு அதிக முன்னுரிமையைும், பெரும் முதலீடுகளையும் செய்து வருகின்றன.

டெஸ்லா முன்னிலை
மின்சார கார் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. அதிசிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த மின்சார கார்கள் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தியாவிலும் டெஸ்லா கார்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க் எதிர்மறை கருத்து
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கின் புதுமையான யோசனைகளும், தொழில்நுட்ப விஷயங்களும் எல்லோரையும் கவர்ந்த விஷயமாக பாராட்டுதலுக்குரியதாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், மின்சார கார்களுக்கு மாற்றாக கூறப்படும், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ஃப்யூவல் செல் கார்கள் குறித்து எலான் மஸ்க் எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

ஹைட்ரஜன் கார்கள் சிறந்ததா?
ஹைட்ரஜன் கார்கள் எதிர்காலத்தில் சிறந்த போக்குவரத்து தீர்வாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்று பெரும்பான்மையான ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்குதில் பெயர் பெற்ற எலான் மஸ்க் ஹைட்ரஜன் கார்கள் குறித்து எதிர்மறை கருத்துக்களை கூறி வருவது பலருக்கும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில், எலெக்ட்ரிக் கார்களைவிட ஹைட்ரஜனில் இயங்கும் கார்கள் கூடுதல் சிறப்புகளை பெற்றிருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர்.

ஆனந்த் மஹிந்திராவுக்கு வேண்டுகோள்
ஹைட்ரஜன் கார்கள் குறித்து எலான் மஸ்க் கூறி இருக்கும் எதிர்மறை கருத்தை சுட்டிக்காட்டி, அதனை நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன் என்று சஞ்சய் சுவாமி என்பவர் ஆனந்த் மஹிந்திராவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பேட்டரியில் இயங்கும் முழுமையான மின்சார கார்களை தவிர்ப்பதற்கு ஹைட்ரஜன் கார்கள் சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதைவிட வேறென்ன வேண்டும்...
மின்சார கார்களைவிட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்கள் இணையான சாதக, பாதக அம்சங்களை பெற்றிருக்கின்றன. ஹைட்ரஜன் எரிபொருளை காரின் எரிபொருள் கலனில் நிரப்புவதற்கு 5 நிமிடங்கள்தான் ஆகும். அதாவது, பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு ஆகும் அதே நேரத்தில் ஹைட்ரஜன் எரிபொருளை நிரப்ப முடியும்.

மின்சார கார்களின் பாதக விஷயம்
அதேநேரத்தில், மின்சார கார்களின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு பல மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக மின்னேற்றம் செய்தாலும், குறைந்தது ஒரு மணிநேரம் பிடிக்கும். ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்களின் பயண தூரம் என்பது கிட்டத்தட்ட ஒரே அளவுதான் இப்போது உள்ளன.

மாசு உமிழ்வு
மின்சார கார்களுக்கான லித்தியம் அயான் பேட்டரி உற்பத்தி மூலமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கை ஒப்பிடும்போது ஹைட்ரஜன் கார்கள் குறைவான மாசு உமிழ்வை வழங்கும் என்று கூறப்படுகிறது.

எரிபொருள் நிலையங்கள்
எனினும், ஹைட்ரஜன் எரிபொருள் நிலையங்கள் பரவலாக அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெட்ரோல் நிலையங்கள் போன்று ஹைட்ரஜன் எரிபொருள் நிலையங்கள் அமைத்துவிட்டால், நீண்ட தூர பயணங்களின்போது பிரச்னை இருக்காது. ஹைட்ரஜன் கார்களில் கழிவாக நீராவி மட்டுமே வெளியேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அபாயம்
ஹைட்ரஜன் எரிபொருள் அதிக அழுத்தத்திலான கலன்களில் வைக்கப்படுவதால், தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தயங்கக்கூடும். அதேபோன்று, ஹைட்ரஜன் கார்களின் விலையும் மிக அதிகம். அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்போது மட்டுமே விலை குறைவதற்கான வாய்பு உள்ளது.

ஹைட்ரஜன் கார்கள் விலை
டொயோட்டா மிராய், ஹோண்டா கிளாரிட்டி, ஹூண்டாய் நெக்ஸோ உள்ளிட்ட கார்கள் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதன் உற்பத்தி செலவீனம் அதிகமாக இருப்பதால், மின்சார கார்களைவிட விலை மிக அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஹைட்ரஜன் கார்களில் இருக்கும் பல்வேறு பாதகங்களை மனதில் வைத்துதான் எலான் மஸ்க் அவ்வாறு கூறி வருகிறார்.

எலான் மஸ்க்கிற்கு பாராட்டு
இந்த நிலையில், எலான் மஸ்க்கின் புதுமையான யோசனைகள், கண்டுபிடிப்புகளை ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் மூலமாக நேரடியாக பலமுறை பாராட்டி உள்ளார். அத்துடன், டெஸ்லா கார்களை இந்தியா கொண்டு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். மேலும், தனது அங்கமாக செயல்படும் பினின்ஃபரீனா பிராண்டில் பேடிஸ்ட்டா என்ற உலகின் அதிவேக எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் மஹிந்திரா கண் அசைத்தால்
இந்த நிலையில், சஞ்சய் சுவாமியின் டிவிட்டுக்கு ஆனந்த் மஹிந்திரா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று ஆட்டோமொபைல் துறையினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருவேளை ஆனந்த் மஹிந்திரா இதற்கு இசைவு தெரிவித்து, அதில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று களம் இறங்கினால், நிச்சயம் சாதித்துக் காட்டுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

டெஸ்லாவுக்கு காத்திருக்கும் ஆகப்பெரும் சவால்
அவ்வாறு, ஹைட்ரஜன் கார்கள் களமிறக்கப்படும்போது, அது நிச்சயம் டெஸ்லாவுக்கு கடும் சவாலாக இருக்கும். அப்போது டெஸ்லா மிகப்பெரிய சரிவை சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனந்த் மஹிந்திரா ஏதேனும் கூறுவாரா என்பதை காண்பதற்கு எல்லோரும் வெயிட்டிங். எலான் மஸ்க் இந்தளவுக்கு ஹைட்ரஜன் கார்கள் மீது பேசும்போது ஆனந்த் மஹிந்திரா யோசிக்காமல் இறங்குவாரா என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








