நொடிப்பொழுதில் செயல்பட்ட டெஸ்லா தானியங்கி கார்: கோர விபத்தில் இருந்து தப்பிக்கும் அதிர்ச்சி வீடியோ!
டெஸ்லா மாடல் 3 காரின் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் தன்னிச்சையாக செயல்பட்டு காரை உடனடியாக நிறுத்தி, பெரும் விபத்திலிருந்து தப்பிக்கும் திக் திக் வீடியோக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் பேட்டரி கார்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் இந்த கார், ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, இன்றளவும் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வராமல் உள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்டதாக உள்ளது. அதேபோல, பாதுகாப்புக்கும் சலைத்தது அல்ல. காரின் தொழில்நுட்பத்திலும் சரி, பயணிகளின் பாதுகாப்பிலும் சரி டெஸ்லா கார் சிறந்த பாதுகாவலானக உள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற விபத்து ஒன்று சான்றாக அமைந்துள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, டெஸ்லா நிறுவனம் ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் டெஸ்லா காரின் மென்பொருளை யாரேனும் ஹேக் செய்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், டெஸ்லா மாடல்3 காரும் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தது. டெஸ்லாவின் அசைக்க முடியாத இந்த நம்பிக்கைக்கு காரணம், அதன் மென்பொருள் கட்டுமானம் தான். மேலும், இந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் இதுவரை டெஸ்லா மாடல்3 காரின் மென்பொருளை யாரும் ஹேக் செய்யவில்லை.

இந்த நிலையில் தான், சிக்னலுக்காக காத்திருந்த டெஸ்லா கார் மீது அதிவேகமாக வந்த செவர்லே கார் மோதவிருந்தது. ஆனால், டெஸ்லாவின் ஆட்டோமேடிக் பிரேக்கிங்க சிஸ்டம் உடனடியாக செயல்பட்டு விபத்திலிருந்து தன்னையும், தன் உரிமையாளரையும் காப்பாற்றி உள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிஸியான நான்கு முனைகள் கொண்ட அந்த சாலையில் சிக்னல் கிடைத்த உடன் கார்கள் புறப்பட ஆரம்பிக்கின்றன. அதில், டெஸ்லா மாடல்3யும் ஒன்று. அப்போது, வலது புறமாக அதிவேகமாக வந்த செவர்லே செடான் கார், சிக்னலை மீறும் வகையில் சீரிப்பாய்ந்து வந்தது. முன்னதாக ஆடி ஏ4 மாடல் கார் மீது மோதிய செவர்லே பின்னர், டெஸ்லா மீது மோத வந்தது. ஆனால், டெஸ்லாவின் ஆடோமேடிக் பிரேக்கிங் சிஸ்டம் தன்னிச்சையாக செயல்பட்டு காரை உடனடியாக நிறுத்தியது. பின்னர், அந்த கார் டெஸ்லாவுக்கு முன்னதாகச் சென்றுக் கொண்டிருந்த டிரக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், டிரக் சற்று தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கவிழ்ந்தது. டெஸ்லாவின் இந்த சமேயோஜிதமான செயலால் காரில் பயணம் செய்தவர்கள் சிறிதளவும் காயமின்றி தப்பினார்கள்.

இந்த விபத்தைப் பொருத்தவரை, விபத்தை ஏற்படுத்திய செவர்லே கார் எதிர்பார்க்காத திசையில் இருந்து, எதிர்பார்க்காத நேரத்தில் வந்து விபத்தை ஏற்படுத்தியது. ஆனால், டெஸ்லா காரில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன சென்சார்கள், நொடிப்பொழுதில் செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்தது.
மேலும், இந்த வீடியோக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காட்சியைக் கண்ட பலர் டெஸ்லாவின் இந்த சக்தியைக் கண்டு வாயடைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications









