டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் இந்திய வருகை உறுதியானது!
இந்தியாவில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் சிறந்து விளங்குகிறது. அதிசிறந்த செயல்திறன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் கவர்ந்து வருகின்றன. இந்த நிலையில், டெஸ்லா கார்களின் வருகையை இந்தியர்களும் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஒரு சில பெரும் பணக்காரர்கள் ஆவலை அடக்க முடியாமல், டெஸ்லா காரை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், டெஸ்லா கார்களின் இந்திய வருகை குறித்து அவ்வப்போது சமூக ஊடகங்கள் வழியாக அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்கிடம் இந்தியர்கள் வினவுவதுண்டு. அதற்கு அவர் 2019 அல்லது 2020ல் வரும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கின்றார்.

இந்த நிலையில், கடந்த 21ந் தேதி எலான் மஸ்க்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், ஹைப்பர்லூப் சாதனத்திற்கான வடிவமைப்பு போட்டியை நடத்தியது. இதில், இந்தியா சார்பில் சென்னை ஐஐடி மாணவர் குழு பங்கேற்றது. இந்த நிகழ்வின்போது, டெஸ்லா கார்களின் இந்திய வருகை குறித்து எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் இன்னும் ஓர் ஆண்டிற்குள் இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது, 2020ம் ஆண்டில் டெஸ்லா கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்திய அரசின் நேரடி அன்னிய முதலீட்டுக் கொள்கை மற்றும் இதர அரசு விதிமுறைகளால்தான் இந்தியாவில் டெஸ்லா கார்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் எலான் மஸ்க் காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா கார் நிறுவனம் முதலாவதாக, இந்தியாவில் டெஸ்லா மாடல் 3 என்ற எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிகிறது. இதுதான் அந்நிறுவனத்தின் விலை குறைவான மாடல் என்பதுடன், இந்த காருக்கு உலக அளவில் முன்பதிவு பெறப்பட்டது. இந்த காருக்கு இந்தியர்கள் பலரும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

எனவே, இந்த காரை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பல்வேறு நாட்டு வாடிக்கையாளர்களை வசியம் செய்த டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் காரின் டிசைன் அம்சங்களுடன் கூடிய அடக்கமான வகை செடான் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பனோரமிக் சன்ரூஃப், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளன.

இந்த காரில் உட்புறத்தில் 15 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த சிஸ்டத்தின் மூலமாக பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் காரின் இயக்கத் தகவல்களையும், கட்டுப்பாட்டு வசதிகளையும் பெற முடியும்.

இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடும். இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 480 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

அமெரிக்காவை தொடர்ந்து சீனாவில் தனது புதிய கார் ஆலையை டெஸ்லா நிறுவனம் கட்டமைத்து வருகின்றது. ஆண்டுக்கு 5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனுடன் இந்த ஆலை அமைக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் விற்பனை செய்வதற்கான கார்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கும் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Source: ET


Click it and Unblock the Notifications








