ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் டெஸ்லா!
ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமைய செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் சிறந்து விளங்குகிறது. வடிவமைப்பு, இடவசதி, தொழில்நுட்ப வசதிகள், பயண தூரம் என அனைத்து விதத்திலும் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன.

தற்போது நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர் துணையில்லாமல் தானியங்கி முறையில் காரை செலுத்தும் ஆட்டோ பைலட் தொழில்நுட்பத்தை டெஸ்லா நிறுவனம் தனது கார்களில் வழங்கி வருகிறது. எனினும், முழுமையான ஆட்டோ பைலட் தொழில்நுட்பம் இன்னும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், ஓட்டுனர் உதவியில்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் முழுமையான ஆட்டோ பைலட் தொழில்நுட்பத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக, கார் முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும். பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும்போது, உரிமையாளர் நிற்கும் இடத்தில் இருந்து 200 அடி தூரம் வரை தானியங்கி முறையில் கார் இயங்கும். எனினும், அசம்பாவிதங்களை தவிர்க்க ஓட்டுனர் கண்காணிப்பும் அவசியம் என்று டெஸ்லா தெரிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை சோதித்து பார்த்துள்ளதாக டெஸ்லா அதிகாரி எளான் மஸ்க் தெரிவித்துள்ளார். 'ஸ்மார்ட் சம்மன்' என்ற பெயரில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும், இதன் நம்பகத்தன்மை முழுமையாக உறுதி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு இறுதியில்தான் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக டெஸ்லா நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு தனது கார்களை எடுத்துச் செல்ல இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்த புதிய தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களின் கார்களிலும் வழங்குவதற்கு டெஸ்லா முடிவு செய்துள்ளது. எனினும், இது ஓட்டுனர்களின் கண்காணிப்பின் கீழ் செயல்படுத்துவதே சாலச்சிறந்ததாக டெஸ்லா கருத்து தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








