மிக குறைந்த செலவில் ஒரு லட்சம் கிமீ பயணம்... வாகன ஓட்டிகளை வியப்பில் ஆழ்த்தும் புதிய தொழில்நுட்பம்
மிகவும் குறைவான செலவில் ஒரு லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் வகையிலான புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் உங்களை வியப்பில் ஆழ்த்தலாம்.
மிகவும் குறைவான செலவில் ஒரு லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் வகையிலான புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் உங்களை வியப்பில் ஆழ்த்தலாம்.

உலகம் முழுக்க வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்க்கான தேவையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்தியா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகளிடம் போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை. எனவே அத்தகைய நாடுகள் அனைத்தும், சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பெரும் தொகையை செலவிடுவதால், அந்த நாடுகளின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே கச்சா எண்ணெய்க்கான மாற்று எரிபொருட்களை கண்டறிவதில் உலக நாடுகள் அனைத்தும் மிகவும் மும்முரமாக உள்ளன.

இந்த சூழலில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றை எரிப்பதன் மூலமாக ஹைட்ரஜன் உருவாக்கப்படுகிறது.

இதனை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்த முடியும். இது முற்றிலும் சுத்தமான எரிபொருள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை ஒருபோதும் மாசுபடுத்தாது.

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடிய கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களை வெளியிடாது. அதற்கு பதில் கழிவு பொருளாக தண்ணீர் மட்டுமே வெளியாகும்.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வாகனம் இயங்க இயங்க தண்ணீர் உற்பத்தியாகும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்குவதன் மூலம் பல்வேறு நன்மைகள் விளையும்.

தற்போதைய நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழல் சீர்கேட்டை உண்டாக்கி வருகின்றன. ஆனால் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தையும் ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

இதுதவிர ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான வாயுக்களை வெளியிடாது. மாறாக தண்ணீர் உற்பத்தியாகும். இந்த தண்ணீரை பருக முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள், விண்வெளி பயணங்களின்போது, ஹைட்ரஜன் எரிபொருளில் இருந்து கழிவாக வெளியேறிய தண்ணீரை பருகியுள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வேஸ்ட்2டிரைசிட்டி (Waste2tricity) என்ற நிறுவனம்தான், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து, ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. அத்துடன் இதற்கு காப்புரிமையும் பெற்று விட்டது.

25 டன் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து, 60,000 மைல்கள் பயணிக்க தேவையான ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்க முடியும் என அந்நிறுவனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 60,000 மைல்கள் என்பது சுமார் 97 ஆயிரம் கிலோ மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் கழிவுகளை ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றுவதற்கு மிகவும் குறைந்த செலவே ஆகும் என கூறப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசலை காட்டிலும் மிகவும் மலிவான விலையில் ஹைட்ரஜன் எரிபொருள் கிடைக்கும்.

பிளாஸ்டிக் கழிவுகளை ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றும் திட்டத்திற்காக, முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டாவுடன் கைகோர்த்து, 100 மறுசுழற்சி நிலையங்களை, வேஸ்ட்2டிரைசிட்டி நிறுவனம் அமைக்கவுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காகவும், சுற்றுச்சூழலை சீராக பேணுவதற்காகவும் மாற்று எரிபொருட்களை கண்டறியும் ஆய்வுகளை பெரும்பாலான நாடுகள் முடுக்கி விட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் அத்தகைய ஆய்வுகள் இன்னும் தீவிரமடையவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கே வந்து விட்டன.

என்றாலும் இந்தியாவில் இன்னும் ஹைட்ரஜன் எரிபொருட்கள் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. சொல்லப்போனால் இங்கு இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களே சொல்லிக்கொள்ளும்படியாக பயன்பாட்டிற்கு வரவில்லை.

தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பது என்பது இந்தியாவிற்கு தேவையான ஒன்று. ஏனெனில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிடுகிறது.

இதனால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இதற்கு எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பது அவசியமாகிறது.

எனவே தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும், அவற்றில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டையும் மத்திய அரசு ஊக்கப்படுத்தினால், கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைக்கலாம்.


Click it and Unblock the Notifications








