ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் தயாரிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு!
வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் புதிதாக விற்பனை செய்யப்படும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை பொருத்துவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது. வாகன விற்பனை நிலையங்களிலேயே இந்த புதிய நம்பர் பிளேட் ப
உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை தயாரிப்பதற்காக தமிழக போக்குவரத்து துறைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

வாகனங்களில் போலி நம்பர் பிளேட்டுகளை ஒழித்துக் கட்டவும், விதிமுறை மீறுவோரையும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை எளிதாக பிடிக்கும் விதத்தில் வாகனங்களில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்துவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை செயல்படுத்த மத்திய அரசும் தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, மாநில அரசுகளையும் அறிவுறுத்தியது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் புதிதாக விற்பனை செய்யப்படும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை பொருத்துவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது.

வாகன விற்பனை நிலையங்களிலேயே இந்த புதிய நம்பர் பிளேட் பொருத்திய பின்னரே வாகனங்கள் டெலிவிரி கொடுக்கப்படும். இதனால், போலி நம்பர் பிளேட்டுகளை ஒழிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகையில் க்ரோமிய பூச்சுடன் கூடிய ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். மேலும், இந்த ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டை நினைத்த மாத்திரத்தில் மாற்ற இயலாது. அப்படி, மீறி நீக்கினால் தகவல்கள் அழிந்துவிடும்.

குறிப்பிட்ட தூரத்தில் இருந்த காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் வண்டியின் விபரங்களை துல்லியமாக கண்டறிந்துவிடும். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் நம்பர் பிளேட்டை மாற்றி குற்றங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும். அதேபோன்று, விதிமீறலில் ஈடுபடுவோரையும் எளிதாக கண்டறிந்துவிடலாம்.

இனி அரசால் அங்கீகரிக்கப்படும் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே, வாகன பதிவு எண் பலகையை தயாரிக்க முடியும். இந்த நிலையில், ஹை செக்யூர்ட்டி நம்பர் பிளேட் தயாரித்து, விற்பனை செய்யும் பணியை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் நோக்கில் போக்குவரத்து துறை சார்பில் டென்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியை மேற்கொள்ள விரும்புவோர் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் செயல்படும் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பழைய வாகனங்களுக்கும் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டை அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலிருந்து பெற்று பொருத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 25.66 கோடி வாகனங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்த பின்னர், போலி நம்பர் பிளேட்டுகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








