எலெக்ட்ரிக் கார்களுக்கு சிறப்பு ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு!
மின்சார கார் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான சிறப்பு திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது.
எலெக்ட்ரிக் கார் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்காக சிறப்பு திட்டத்தை தமிழக அரசு வெளியிட இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் டெட்ராய்ட் என வர்ணிக்கப்படும் சென்னையில் பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஹூண்டாய், பிஎம்டபிள்யூ, பாரத் பென்ஸ், ராயல் என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னையில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவிய அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையால், வாகன துறைக்கான முதலீடு வெகுவாக குறைந்தது. கியா மோட்டார்ஸ் மற்றும் இசூஸு உள்ளிட்ட நிறுவனங்கள் ஆந்திராவில் தங்களது புதிய ஆலைகளை அமைத்தன. இது பெரும் இழப்பாக கருதப்பட்டது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் துவங்கிய ஜிம் (GIM) எனப்படும் உலக முதலீட்டாளர் மாநாட்டில், வாகன நிறுவனங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை அறிவித்துள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக இருக்கின்றன. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டு இருப்பது ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹூண்டாய், யமஹா உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை அறிவித்துள்ளன. சென்னை கார் ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், மின்சார கார் உற்பத்திக்காகவும் சென்னை ஆலையை விரிவாக்கம் செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

இதனால், இந்தியாவில் ஒரே இடத்தில் அதிக மூதலீடு செய்துள்ள கார் நிறுவனமாகவும் ஹூண்டாய் விளங்குகிறது. ரூ.23,000 கோடி வரை சென்னை ஆலைகளில் ஹூண்டாய் கார் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த யமஹா இருசக்கர வாகன நிறுவனமும் ரூ.1,500 கோடியை புதிதாக முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், வரும் காலத்தில் சென்னையை மின்சார வாகன உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மின்சார கார் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான சிறப்பு திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது. மேலும், மின்சார கார் வடிவமைப்புக்ககான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள், உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்க இந்த திட்டம் வழிவகுக்கும்.

நாட்டிலேயே முதலாவதாக மின்சார கார் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற சலுகை திட்டத்தை தமிழக அரசு சொந்தமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மின்சார வாகன உற்பத்தி துறைக்கான சிறப்பு சலுகை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்திய உடன், தனது சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுதவிர்த்து, மாநாட்டை துவங்கி வைத்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்தின் பெரு நகரங்களில் மின்சார பஸ்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அத்துடன், புதிய மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான சலுகைகளையும் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுவும் மின்சார வாகன தயாரிப்பாளர்களுக்கு உற்சாகத்தை தரும் செய்தியாக அமைந்துள்ளது.

இந்த மாநாட்டில் பேசிய மஹிந்திரா குழுமத்தின் நிதித் துறை தலைமை அதிகாரி வி.எஸ்.பார்த்தசாரதி பேசுகையில்," தானியங்கி கார்களுக்கான தொழில்நுட்பம், கார்களுக்கான இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திற்கான தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி துறையில் தமிழகத்திற்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் காத்திருக்கிறது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications