இந்திய நிறுவனத்தை வீழ்த்தி கெத்து காட்டும் ஜப்பான் கம்பெனி... இந்த ஆட்டம் இன்னும் கொஞ்ச நாள்தான்...
அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் இந்திய நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ஜப்பான் நிறுவனம் கெத்து காட்டியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் ஆயுதம் தயார் நிலையில் இருப்பதால், இந்த ஆட்டம் இன்னும் கொஞ்ச நாள் மட்டுமே நீடிக்க கூடும்.

2019ம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த டாப்-5 நிறுவனங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி வழக்கம் போல் முதலிடத்தை பிடித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 1,42,150 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி 1,40,600 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 1.1 சதவீத வளர்ச்சியாகும்.

இரண்டாவது இடத்தை ஹூண்டாய் பிடித்துள்ளது. கடந்த மாதம் மொத்தம் 45,803 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 45,508 கார்கள் மட்டுமே ஹூண்டாய் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இதன்மூலம் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹூண்டாய் 1 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. மூன்றாவது இடத்தை இந்தியாவின் மஹிந்திரா பிடித்துள்ளது.

கடந்த மாதம் மொத்தம் 22,399 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. முன்னதாக 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 22,360 கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இதன்மூலம் விற்பனையில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி அதே நிலையில் நீடிக்கிறது.

இந்த சூழலில் ஜப்பானை சேர்ந்த ஹோண்டாவின் துணை நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Limited-HCIL), பயணிகள் வாகன செக்மெண்ட்டில் (Passenger Vehicles Segment), இந்தியாவின் டாடாவை விட அதிக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 18,261 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 14,838 கார்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது 23 சதவீத வளர்ச்சியாகும்.

2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த டாப்-5 நிறுவனங்களின் பட்டியலில் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியை சந்தித்திருக்கும் ஒரே ஒரு நிறுவனம் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் மட்டுமே.

இந்நிறுவனத்தில் இருந்து வெளிவரும் காம்பேக்ட் செடான் வகை காரான அமேஸ் (Amaze), க்ராஸ்ஓவர் வகை காரான டபிள்யூஆர்-வி (WR-V) ஆகியவற்றின் சிறப்பான பெர்ஃபார்மென்ஸே இதற்கு முக்கிய காரணம். இதுதவிர ஹோண்டா சிட்டியும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 17,826 கார்களை விற்பனை செய்துள்ளது. முன்னதாக 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அந்நிறுவனம் 20,055 கார்களை விற்பனை செய்திருந்தது. இது 13 சதவீத வீழ்ச்சியாகும்.

நான்காவது இடத்தை பிடிக்க ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் டாடாவை பின்னுக்கு தள்ளி ஹோண்டா நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

இந்த சூழலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா ஹாரியர் எஸ்யூவி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கு தற்போது புக்கிங் குவிந்து வருகிறது. எனவே ஹாரியரின் உதவியுடன் டாடா மோட்டார்ஸ் சரிவில் இருந்து மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி காரானது, 12.69 லட்ச ரூபாய் முதல் 16.25 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இதுதவிர அடுத்த சில மாதங்களுக்குள்ளாக புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் ஒன்றையும் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எனவே வருங்காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என டாடா மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








