300 கார்களை நாசமாக்கிய பெங்களூர் பேரழிவு... பரிதவிக்கும் உரிமையாளர்களை நெகிழ வைத்த டொயோட்டா...
பெங்களூர் தீ விபத்து சம்பவத்தில், 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாயின. இதனால் பரிதவித்து கொண்டிருக்கும் கார் உரிமையாளர்களுக்கு, டொயோட்டா நிறுவனம் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள விமான படை தளத்தில், ஏரோ இந்தியா-2019 என்ற சர்வதேச ஏர் ஷோ மற்றும் விமான கண்காட்சி, கடந்த 20ம் தேதி தொடங்கியது. 5 நாள் நிகழ்ச்சியான இது நேற்றுடன் (பிப்ரவரி 24) நிறைவடைந்தது.

இதில், நூற்றுக்கணக்கான விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி, பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தன. இந்த சூழலில் 4ம் நாள் நிகழ்ச்சிகள், நேற்று முன் தினம் (பிப்ரவரி 23) நடைபெற்று கொண்டிருந்தன.

சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு குழுமியிருந்தனர். இதனால் பார்க்கிங் ஏரியாவில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. ஆனால் துரதிருஷ்டவசமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 கார்கள் எரிந்து நாசமாயின.

மதியம் சரியாக 12.17 மணியளவில் தீ விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் கண்ட மிக மோசமான தீ விபத்து சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஹாலிவுட் பட பாணியில் கார்கள் பற்றி எரியும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருந்தபோதும் தீ விபத்தில் கார்களை பறிகொடுத்த அதன் உரிமையாளர்கள் பலர் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி போய் நின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், டொயோட்டா நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளது. பெங்களூர் ஏரோ இந்தியா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்ய டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.

பெங்களூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட டொயோட்டா வாடிக்கையாளர்கள், 180042500001 அல்லது 08066293001 என்ற ஹெல்ப்லைன் எண்கள் மூலம், டொயோட்டா நிறுவனத்தின் வாடிக்கையாளர் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

அத்துடன் தனது இன்சூரன்ஸ் பிரிவு மூலமாக, நேற்று காலை 8.30 மணி முதல் (பிப்ரவரி 24), சம்பவ இடத்தில் ஆன்-சைட் அஸிஸ்டன்ஸ் (On-site Assistance) சேவையையும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் வழங்கியது.

இதுதவிர இன்சூரன்ஸ் ஆய்வு மற்றும் சிறப்பு டோவிங் உதவி (Special Towing Assistance) உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணிகளுக்காக, சம்பந்தப்பட்ட பெங்களூர் டீலர்களின் வாடிக்கையாளர் தொடர்பு அமைப்புகளுடனான கான்ஃபரன்ஸ் காலுக்கும் (Conference Call) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இந்த உடனடி நடவடிக்கைகளுக்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் என்பது ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டொயோட்டா நிறுவன வாடிக்கையாளர்கள் அனைவரும் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு எப்படி சேவையாற்றுகிறோம்? என்பதில்தான் ஒரு கார் நிறுவனத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.

கார்களை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டி, பணத்தை வாங்கி கல்லா பெட்டியில் போடுவதுடன் மட்டும் ஒரு நிறுவனத்தின் பணி முடிந்து விடுவதில்லை. விற்பனைக்கு பிந்தைய சேவையையும் வாடிக்கையாளர்களுக்கு முறையாக வழங்க வேண்டும்.

அதனை டொயோட்டா நிறுவனம் சிறு பிழையும் இன்றி கனகச்சிதமாக செய்து கொண்டுள்ளது. இதன் காரணமாகதான் டொயோட்டா நிறுவனத்தால் உலகம் முழுக்க வெற்றி கொடி நாட்ட முடிகிறது.

இதனிடையே பெங்களூர் தீ விபத்து சம்பவத்திற்கு உறுதியான காரணம் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட் துண்டு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தீவிரவாதிகளின் நாசவேலையாக இருக்க கூடுமோ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications








