டொயோட்டா பிரையஸ் பிரைம் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!
சுற்றுச்சூழலுக்கு உகந்த டொயோட்டா பிரையஸ் பிரைம் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டொயோட்டா நிறுவனம் உலகளாவிய அளவில் விற்பனை செய்யும் பிளக்- இன் ஹைப்ரிட் ரக கார் மாடல் பிரையஸ் பிரைம். இந்த கார் பல்வேறு வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவிலும் இந்த காரை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் டொயோட்டா ஈடுபட்டுள்ளது.

டொயோட்டா பிரையஸ் காரின் மூன்றாம் தலைமுறை மாடலில் பிளக் - இன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட பிரைம் மாடல் தேர்வுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த காரை இந்தியாவில் இறக்குமதி செய்து சோதனை ஓட்டங்கள் நடத்துவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

ஆட்டோகார் புரோஃபஷனல் தளத்திற்கு பேட்டியளித்துள்ள டொயோட்டா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் என்.ராஜா கூறுகையில்," இந்தியாவில் பிளக்- இன் தொழில்நுட்பம் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் மாடல் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் கேம்ரி ஹைப்ரிட் காரைவிட விலை அதிகம் இருக்கிறது. எனவே, பிரையஸ் பிரைம் பிளக் இன் ஹைப்ரிட் மாடலுக்கு அதிக விலை நிர்ணயிக்க வேண்டி இருக்கலாம்.

எனவே, வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த அளவு வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை. எனினும், எதிர்கால சந்தையை மனதில் வைத்து இந்த புதிய முயற்சியில் டொயோட்டா கார் நிறுவனம் இறங்கி இருப்பதாகவே தெரிகிறது.

நான்காம் தலைமுறை டொயோட்டா பிரையஸ் காரின் ஹைப்ரிட் மாடலைவிட பிளக் இன் ஹைப்ரிட் மாடல் தோற்றத்தில் மிக வசீகரமான அம்சங்களை பெற்றிருக்கிறது. மேலும், அண்மையில் புதுப்பொலிவுடன் வெளிநாடுகளில் விற்பனையில் இருந்து வருகிறது.

டொயோட்டா பிரையஸ் ஹைப்ரிட் காருக்கு மாற்றாக புதிய பிரையஸ் பிரைம் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டொயோட்டா பிரையஸ் பிரைம் கார் காட்சிக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது.

புதிய டொயோட்டா பிரையஸ் பிரைம் காரின் பிளக் இன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 122 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

இந்த காரில் 8.8 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 120 கிலோ எடை கொண்டது. இந்த காரில் 5 தொகுதிகளை கொண்ட பேட்டரி பேக் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 19 செல்கள் இடம்பெற்றுள்ளன.

குயிக் சார்ஜர் மூலமாக 20 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். சாதாரண முறையில் 2 மணி 20 நிமிடங்கள் பிடிகக்ும். இந்த கார் வெறும் பேட்டரி திறனில் மட்டும் 40 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Autocar pro


Click it and Unblock the Notifications








