வரலாற்றில் முதல் முறையாக இது நடக்கப்போகிறது... கணக்கு காட்ட முடியாமல் தவிக்கும் டொயோட்டா...
கணக்கு காட்டுவதில் டொயோட்டா நிறுவனத்திற்கு பிரச்னை ஏற்பட்டுள்ள சூழலில், வரலாற்றில் முதல் முறையாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, மஹிந்திரா மற்றும் டொயோட்டா ஆகிய ஐந்து முன்னணி கார் நிறுவனங்கள், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான தங்களது சேல்ஸ் ரிப்போர்ட்டை தற்போது வெளியிட்டுள்ளன.

இதில், ஹோண்டாவை தவிர எஞ்சிய அனைத்து நிறுவனங்களின் கார்கள் விற்பனையும் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தை எடுத்து கொண்டால், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 10,112 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 13,871 கார்களை டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இது சுமார் 22 சதவீத வீழ்ச்சியாகும். ஆனால் ஏற்றுமதி அதிகரித்திருப்பது, டொயோட்டா நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 1,301 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 834 கார்களை மட்டுமே டொயோட்டா ஏற்றுமதி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, க்ளான்சா கார் விற்பனையை யார் கணக்கில் சேர்ப்பது? என்பது தொடர்பாக டொயோட்டா மற்றும் மாருதி ஆகிய இரண்டு நிறுவனங்களும் சண்டையிட்டு கொள்வதாக தகவல்கள் வெளியானது.

மாருதி பலேனோ கார்தான், டொயோட்டா பிராண்டில் க்ளான்சா என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த கார் சுஸுகி மோட்டார் கம்பெனியால், குஜராத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த சூழலில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான தங்களது சேல்ஸ் ரிப்போர்ட்டில், க்ளான்சா காரின் விற்பனையை மாருதி ஏற்கனவே குறிப்பிட்டு விட்டது. இதன்படி பார்த்தால், கடந்த மாதம் 354 யூனிட் க்ளான்சா கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

ஆனால் டொயோட்டா நிறுவனம் க்ளான்சாவை தங்களது விற்பனை எண்ணிக்கையில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்த சூழலில், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்படி பார்த்தால், டொயோட்டாவால் அதனை செய்ய முடியாது.

அதாவது க்ளான்சா விற்பனையை தங்களுடையது என டொயோட்டா நிறுவனத்தால் குறிப்பிட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இந்த கார் மாருதி சுஸுகி நிறுவனத்தால்தான் டொயோட்டவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆக மொத்தத்தில் வாடிக்கையாளர்களுக்கு காரை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம், அதன் விற்பனை எண்ணிக்கையை தங்களது சேல்ஸ் ரிப்போர்ட்டில் குறிப்பிட முடியாமல் போவது இன்டஸ்ட்ரீயில் இதுவே முதல் முறையாக இருக்கப்போகிறது என கூறப்படுகிறது.

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பலேனோ காரானது க்ளான்சா என்ற பெயரில், வரும் ஜூன் மாதம் 6ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. டொயோட்டா க்ளான்சா காரின் படங்களும் கூட சமீபத்தில் கசிந்தன.

இதனை வைத்து பார்த்தால் தோற்றத்தில், மாருதி பலேனோவும், டொயோட்டா க்ளான்சாவும் கிட்டத்தட்ட ஒன்று போலவேதான் உள்ளன. சுஸுகி லோகோவிற்கு பதிலாக டொயோட்டா பேட்ஜ் இடம்பெறவுள்ளது மட்டுமே தோற்றத்தில் உள்ள ஒரே ஒரு மாற்றமாக பார்க்கப்படுகிறது.

டொயோட்டா க்ளான்சா காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. பிஎஸ் VI மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், 89 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்ய கூடியது.

அதே நேரத்தில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் சிவிடி ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. ஆனால் டொயோட்டா க்ளான்சா காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படாது. முன்னதாக சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய இரண்டு முன்னணி கார் நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன.

சுஸுகி-டொயோட்டா கூட்டணியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள முதல் தயாரிப்பு க்ளான்சாதான். இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாமல், இரண்டு நிறுவனங்களும் பிளாட்பார்ம்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளன. அத்துடன் எதிர்காலத்திற்கான எலெக்ட்ரிக் வாகனங்களை கூட்டாக இணைந்தும் தயாரிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








