இந்தியாவில் டொயோட்டா நிறுவன கார்கள் விற்பனை கடும் சரிவு... எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா?
இந்தியாவில் டொயோட்டா நிறுவன கார்கள் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு தொடக்கம் முதலே ஆட்டோமொபைல் துறை கடுமையாக திணறி வருகிறது. கார், டூவீலர் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் சரிந்து கொண்டே வருவதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன. ஆட்டோமொபைல் துறையின் திணறலுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பொருளாதார மந்தநிலை, வாகனங்கள் மீதான அதிகப்படியான ஜிஎஸ்டி வரி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் உள்ளிட்டவை ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி முக்கியமான காரணங்களாக கூறப்படுகிறது. எனினும் கடந்த அக்டோபர் மாதத்தில் வாகனங்கள் விற்பனை ஓரளவிற்கு நன்றாக இருந்தது.

தீபாவளி பண்டிகை காலமே இதற்கு முக்கிய காரணம். ஆனால் அதன்பின் வந்த நவம்பர் மாதத்தில், பல்வேறு நிறுவனங்களின் வாகன விற்பனை மீண்டும் சரிவு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் டொயோட்டாவும் இதில் ஒன்று. 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான டொயோட்டா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 18.86 சதவீதம் சரிவடைந்துள்ளது. டொயோட்டா நிறுவனம் கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக 9,241 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டொயோட்டா நிறுவனமானது 11,390 கார்களை விற்பனை செய்திருந்தது.

இது 18.86 சதவீத வீழ்ச்சியாகும். டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை போல் உள்நாட்டு விற்பனையும் சரிவடைந்துள்ளது. டொயோட்டா நிறுவனமானது கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்நாட்டில் 10,721 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கையானது வெறும் 8,312 ஆக குறைந்துள்ளது.

அதாவது டொயோட்டா நிறுவனத்தின் உள்நாட்டு கார்கள் விற்பனை 22 சதவீதம் சரிவடைந்துள்ளது. எனினும் டொயோட்டா நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் 929 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 669 ஆக மட்டுமே இருந்தது.

அதாவது டொயோட்டா நிறுவனத்தின் ஏற்றுமதி 38.86 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. எனவே அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன.

டொயோட்டா நிறுவனமும் இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வரும் வரை இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வந்த பிறகு படிப்படியாக இயல்பு நிலை திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








