உலகை அசத்தப்போகும் டொயோட்டாவின் புதிய கார் இதுதான்... மார்க்கெட்டில் கெத்தாக களமிறங்குகிறது...
புதிய எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில், டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் உலக அளவில் மிக பிரபலமாக திகழ்கின்றன. டொயோட்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தற்போது, பார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், பார்ச்சூனர், எஸ்யூவி வகையை சேர்ந்த கார் ஆகும். இன்னோவா கிரிஸ்டா, எம்பிவி ரகத்தை சேர்ந்தது.

பொதுவாக டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் சற்று விலை உயர்ந்தவை. அப்படி இருக்கையில், பட்ஜெட் விலையில் கார்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் நிறைந்த இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா நிறுவனம் மாபெரும் வெற்றியை ருசித்து கொண்டிருப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இதற்கு டொயோட்டா கார்களில் காணப்படும் தரமே முக்கியமான காரணம்.

இதுதவிர டொயோட்டா கார்கள் அனைத்தும் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவையாகவும் உள்ளன. விபத்தில் சிக்கினாலும் கூட, பயணம் செய்பவர்களின் உயிரை பெரும்பாலும் காப்பாற்றி விடும். எனவேதான் விலையை பொருட்படுத்தாமல், வாடிக்கையாளர்கள் டொயோட்டா கார்களை தேர்வு செய்கின்றனர்.

இந்த சூழலில் தற்போது புதிய எஸ்யூவி ரக கார் ஒன்றை களமிறக்கும் பணிகளில் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டொயோட்டா நிறுவனத்தின் டிஎன்ஜிஏ-சி (Toyota New Global Architecture) பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஎன்ஜிஏ-சி பிளாட்பார்ம் ஏற்கனவே டொயோட்டா ப்ரையஸ் (Toyota Prius) மற்றும் டொயோட்டா சி-ஹெச்ஆர் க்ராஸ்ஓவர் (Toyota C-HR Crossover) கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், டொயோட்டா சி-ஹெச்ஆர் க்ராஸ்ஓவர் காரானது, ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய மார்க்கெட்களில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.

டொயோட்டா நிறுவனம் தனது புதிய எஸ்யூவி ரக காரை உலக அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நிஸான் ஜூக் (Nissan Juke), செவர்லே டிராக்கர் (Chevrolet Tracker), ஹோண்டா ஹெச்ஆர்-வி (Honda HR-V) மற்றும் மஸ்டா சிஎக்ஸ்-3 (Mazda CX-3) உள்ளிட்ட கார்களுடன் டொயோட்டா அறிமுகம் செய்யவுள்ள புதிய எஸ்யூவி ரக கார் போட்டியிடும்.

டொயோட்டா நிறுவனம் இந்த காரை இந்திய மார்க்கெட்டிலும் அறிமுகம் செய்தால், ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) உள்ளிட்ட கார்களுக்கு இது கடும் சவாலை அளிக்கும். தற்போது இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது. எனவே டொயோட்டாவின் புதிய எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமானால், நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது இந்தியாவின் பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஹூண்டாய் கிரெட்டா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் டொயோட்டாவின் புதிய எஸ்யூவி ரக கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமானால், ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனை குறைந்து, அதன் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே டொயோட்டா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி காரானது, 2020ம் ஆண்டின் 2வது பாதிக்கு முன்பாக விற்பனைக்கு வராது என கூறப்படுகிறது. அதாவது அதற்கு பின்புதான் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அனேகமாக தாய்லாந்துதான் இந்த காரின் முக்கியமான உற்பத்தி கேந்திரமாக இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்கள் உலகம் முழுவதும் வேகமாக பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் மத்திய அரசும் கூட எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை பயன்பாட்டை ஊக்குவித்து கொண்டிருக்கிறது.

எனவே டொயோட்டாவின் இந்திய துணை நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம், வருங்காலங்களில் இந்திய மார்க்கெட்டில் பல்வேறு ஹைபிரிட் வாகனங்களை களமிறக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
NOTE: Images Used Are Only For Representational Purpose Only


Click it and Unblock the Notifications








