வசூலில் சாதிக்கும் போலீஸ்... செப்டம்பர் மாசம் மட்டுமே இத்தனை கோடியா... வாயை பிளக்க வைக்கும் தகவல்!
புதிய அபராத விதியின்படி, வசூலிக்கப்பட்ட தொகைகுறித்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

போக்குவரத்து விதமீறல்களே அல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் புதிய மோட்டார் வாகன சட்டம் 2019-னை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியது. இது, அமலுக்கு வந்து ஒரு மாதங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில், புதிய விதிகள்மூலம் வசூலிக்கப்பட்ட அபராதங்கள் குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

அந்தவகையில் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசூலிக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள அபராத தொகைகுறித்த தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் செப்டம்பர் 1ம் தேதி அமலுக்குக் கொண்டுவரப்பட்டபோது இருந்ததைக் காட்டிலும் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை இந்த தகவல் அம்மாநில மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், கடந்த ஒரு மாதத்தில் பெங்களூருவில் மட்டும் 10.7 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது முதல், மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை 31 சதவீதம் வரை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த ஆகஸ்டு மாதத்தைக் காட்டிலும் செப்டம்பர் மாதம் குறைந்த அளவிலான வழக்குகளே பதிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான வழக்கு 2.5 லட்சம் வரை குறைந்திருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக கர்நாடக அரசு, புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியபோது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வந்தது. அதுமட்டுமின்றி, பத்து சதவீதம் உயர்த்தப்பட்ட அபராதத்திற்கு எதிராக அனைத்து பக்கங்களிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தன.
ஆகையால், கர்நாடக அரசு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை பாதிக்கு பாதியாக குறைத்து அறிவித்தது.

முன்னதாக, எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அமல்படுத்தப்பட்ட விதிகளின்கீழ் வெறும் ஐந்து நாட்களில் ரூ. 72.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்தே அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

தற்போது என்னதான் விதிமீறல்களுக்கான அபராதம் பாதியாக குறைக்கப்பட்டிருந்தாலும் அது மக்கள் மத்தியில் தற்போது வரை எதிர்ப்பைப் பெற்றாவறே இருந்து வருகின்றது.
அதன் வெளிப்பாடாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அபராதம் குறித்த தகவல் உள்ளது. மேலும், வசூலிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையை வைத்து உள்கட்டமைப்பை சீரமைக்கப் பயன்படுத்தப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு நகரத்தின் காவல்துறை இணை ஆணையர் பி.ஆர். ரவிகாந்தே கவுடா கூறுகையில், "ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில், சேகரிக்கப்பட்ட அபராதத் தொகை அதிகரித்துள்ளது. இது நேர்மறையான தாக்கத்தை காட்டுகிறது. இதற்கு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அபராதத் தொகையே முக்கிய காரணமாக இருக்கின்றது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் அரங்கேற்றுப்பட்ட வந்த விதிமீறல்கள் தற்போது கணிசமாக குறைந்துள்ளது. உதாரணமாக ஹெல்மெட், சீட் பெல்ட் மற்றும் டிரைவிங்கின்போது செல்போன் பேசுவது உள்ளிட்ட விதிமீறல்கள் முந்தையக் காலக்கட்டத்தைக் காட்டிலும் தற்போது அதிகளவில் குறைந்துள்ளன. அதேபோன்று, சிக்னலை மீறிச் செல்வது, ஸ்டாப் லைனை தாண்டி நிறுத்துவது உள்ளிட்டவையும் கணிசமாக குறைந்துள்ளது" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications