இழுத்து மூடப்படும் கார் ஷோரூம்கள்... கொத்து கொத்தாக வீட்டுக்கு அனுப்பப்படும் பணியாளர்கள்!
உலகின் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் வாகனத் துறையாக இந்தியா இருந்து வந்தது. ஆனால், புத்தாண்டு பிறந்தது முதலே வாகன விற்பனை கடுமையான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் கார் உற்பத்தியில் ஜாம்பவானாக விளங்கும் மாருதி சுஸுகி நிறுவனம் பலத்த அடியை சந்தித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவுக்கு குறைந்துபோய்விட்டது.

இதனால், இருப்பு அதிகரித்து வருவதையடுத்து, ஒரு ஷிஃப்ட்டில் மட்டுமே கார் உற்பத்தி செய்ய முடிவு எடுத்துள்ளது. மேலும், ஆலைகளில் பணிபுரிந்த் தற்காலிக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டது.

கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் விற்பனையும் 31 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனை 48 சதவீதம் வரையிலும், மஹிந்திரா கார் விற்பனை 16 சதவீதம் வரையிலும், ஹூண்டாய் கார் விற்பனை 10 சதவீதம் வரையிலும் குறைந்துள்ளது. இதனால், கார் உற்பத்தியை குறைப்பதுடன், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.

நிஸான் நிறுவனமும் சென்னை ஆலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும், டீலர்களில் இருப்பு அதிக அளவில் தேங்கி இருப்பதால், கார் நிறுவனங்கள் உற்பத்தியை கணிசமாக குறைத்துவிட்டன. எனினும், விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளன.

கார் உற்பத்தி துறையில் பல லட்சம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகி இருக்கும் நிலையில், கார் விற்பனை மற்றும் பராமரிப்புத் துறையிலும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டீலர்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 2 லட்சம் பேர் வேலை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் வரையிலான புள்ளிவிபரங்களின்படி, 18 மாதங்களில் மட்டுமே 286 ஷோரூம்கள் மூடப்பட்டுவிட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த ஷோரூம்களில் பணிபுரிந்த 32,000 பேர் வேலையை இழந்துள்ளனர்.

கடந்த மே மாதம் நடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் நிலைமை சீரடையும் எதிர்பார்த்த நிலையில், மந்த நிலை தொடர்கிறது. மேலும், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதனால், நிலைமை விரைவாக சீரடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

இதனால், மந்தநிலை தொடரும் என்ற அச்சம் இருக்கிறது. மேலும், பல ஆயிரக்கணக்கான வேலை இழப்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. பெரும் முதலீடுகளை செய்துள்ள கார் நிறுவனங்களும், டீலர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர். ஆட்குறைப்பு நடவடிக்கை மூலமாக இழப்பை சரிகட்ட முயற்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








