வாகன பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு உயரிய விருது!
கார், பைக்குகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும், மத்திய அரசுக்கு விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது குளோபல் என்சிஏபி அமைப்பு.
கார், பைக்குகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, மத்திய அரசுக்கு குளோபல் என்சிஏபி அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கார்களின் கட்டமைப்பு வலு மற்றும் பாதுகாப்பு நுட்பங்கள் குறித்த அம்சங்களை கிராஷ் டெஸ்ட் நடத்தி ஆய்வு முடிவுகளை குளோபல் என்சிஏபி அமைப்பு வெளியிட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பல கார் மாடல்களை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் செய்தது.

இந்த ஆய்வுகளில் பல கார்கள் மிக மோசமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருப்பது தெரிய வந்தது. வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது. இதைத்தொடர்ந்து, கார் மற்றும் பைக்குகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த தீவிர நடவடிக்கைகளை கவுரவிக்கும் விதமாக, மத்திய அரசுக்கு விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது குளோபல் என்சிஏபி அமைப்பு. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்காரியிடம் குளோபல் என்சிஏபி அமைப்பு தலைவர் மேக்ஸ் மோஸ்லி விருதை வழங்கினார். குளோபல் என்சிஏபி அமைப்பின் பொதுச்செயலாளர் டேவிட் வார்டும் இந்த நிகழ்வில் உடன் இருந்தார்.

கார்களில் ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளையும் அறிவித்தது.

இதனால், அனைத்து கார் நிறுவனங்களும் கார்களின் கட்டுமானத்தை வலுமிக்கதாகவும், மோதல் தாக்கத்தை உள்வாங்கி பயணிகளை பாதுகாக்கும் விதத்தில் கட்டுமானத்தில் மாற்றங்களை செய்து அறிமுகம் செய்து வருகின்றன. வரும் அக்டோபர் முதல் இந்த புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறை அமலுக்கு வர இருக்கிறது.

அதேபோன்று, பைக்குகளிலும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் கட்டாயமாக்கப்பட்டது. 125சிசி திறனுக்கும் குறைவான பைக்குகளில் சிபிஎஸ் பிரேக் சிஸ்டமும், 125சிசி ரகத்திற்கு மேலான இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் எனப்படும் நவீன பிரேக் சிஸ்டமும் வரும் ஏப்ரல் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிர நடவடிக்கைகள் மூலமாக கார், பைக்குகளின் பாதுகாப்பு அம்சங்கள் வெகுவாக மேம்பட்டு வருகின்றன. அண்மையில் குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட் சோதனையில் டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் 5 ஸ்டார் ரேட்டிங்கையும், மஹிந்திரா மராஸ்ஸோ கார் 4 ரேட்டிங்கையும் பெற்று அசத்தின. இதனால், சர்வதேச பாதுகாப்பு தரத்திற்கு இணையாக இந்திய கார்கள் உயர்ந்து வருவது புலனாகியது.

இதுதவிர, வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையை குறைக்கும் விதமாக, பிஎஸ்-6 என்ற மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களை கார்களில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இது அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








