சட்டத்தின் பார்வையில் அனைவரும் ஒன்றே... முதலமைச்சராகவே இருந்தாலும் சரி... அமைச்சர் அதிரடி!
சட்டத்தின்முன் அனைவரும் ஒன்றே. ஆகையால், எந்த வாகனமாக இருந்தாலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அத்துறை அமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனை பல மாநிலங்கள் வரவேற்றாலும், ஒரு சில மாநிலங்கள் முழுமையாக வரவேற்கவில்லை. ஆகையால், இதற்கு ஒருசேர வரவேற்பும், எதிர்ப்பும் நிலவி வருகின்றது.

இதற்கு, புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையான அபராதத்தைக் கொண்டிருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இது முன்பெப்போதும் இல்லாத அளவில் அபராதத்தை உயர்த்தி வசூலிக்க வழிவகைச் செய்துள்ளது. ஆகையால், இது சமானியர்களை கடுமையாக பாதிக்கும் என்று கூறி ஒரு சில மாநிலங்கள் புதிய அபராத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளன.

மேலும், ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு அபராதத்தை குறைத்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்க திட்டமிட்டுள்ளன.
இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையான அபராதத்தை விதிப்பதை மூலதனமாகக் கொண்டிருந்தாலும், நாட்டை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கிலேயே இது கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகையால், பல மாநிலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், அந்த மாநில போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிஹார் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் நிரலா, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் விட்டு விடாதீர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விஐபிக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் என யாருடைய வாகனமாக இருந்தாலும், கட்டாயம் நிறுத்தி வாகனம்குறித்த அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னரே அவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக" தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம், அது அமைச்சர் அல்லது முக்கிய அதிகாரி என யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்" என்று கூறினார்.

ஆகையால், அம்மாநில போக்குவரத்து செயலாளர், அரசாங்க வாகனங்கள் கூட சோதனை செய்யப்பட்டு, விதிகளின் படி தவறு செய்த அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்கள் கூட முறைகேட்டில் ஈடுபடுவதுண்டு. ஆகையால், அரசு வாகனங்களைக் கூட ஆய்வு மேற்கொள்ள போக்குவரத்துத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

ஆகையால், மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, பிரிவு 146ன் கீழ் விதிமீறலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி விதிமீறலில் ஈடுபடும் அரசு அதிகாரிமீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








