மலிவான விலையில் களமிறங்கும் புதிய மாருதி கார்கள்... போட்டி நிறுவனங்களை காலி செய்ய மெகா திட்டம்...
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, மிகவும் மலிவான விலையில், பல்வேறு புதிய கார்களை மார்க்கெட்டில் களமிறக்கவுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸுகி. தற்போது 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மார்க்கெட் ஷேர், மாருதி சுஸுகி வசம்தான் உள்ளது. ஆனால் புதிய மாடல்களின் வரவால், மார்க்கெட்டில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு போட்டி அதிகரித்து கொண்டே செல்கிறது.
எனவே போட்டி நிறுவனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பல்வேறு புதிய மாடல்களை களத்தில் இறக்க மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் பெரும்பாலும் மலிவான விலையில்தான் கார்களை அறிமுகம் செய்யும்.
இதனால் பட்ஜெட் விலையில் புதிய கார் வாங்க முடிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெகு விரைவில், வரிசை கட்டி களமிறங்கவுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய கார்கள் குறித்து இனி பார்க்கலாம்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஆல்டோ (New Generation Maruti Suzuki Alto)
புதிய தலைமுறை ஆல்டோ காரை களமிறக்குவதற்கான பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. தற்போது இருக்கும் மாடலை காட்டிலும் இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இது ரெனால்ட் க்விட்டை போன்று, எஸ்யூவி டிசைன் தீம் உடன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் (Ground Clearance) அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதில், டச் ஸ்கீரின் இன்போஃடெயின்மெண்ட் சிஸ்டம், ட்யூயல் ஏர் பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ், ஸ்பீடு சென்சார் அலர்ட் உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெறவுள்ளன.
பொதுவாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கட்டுமான தரம் (Build Quality) கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், புதிய தலைமுறை ஆல்டோ கார் மிக வலுவாக கட்டமைக்கப்படவுள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா க்ராஸ் (Maruti Suzuki Ertiga Cross)
எர்டிகா காரின் புதிய வேரியண்ட்டை மாருதி சுஸுகி நிறுவனம் களமிறக்கவுள்ளது. அனேகமாக இது எர்டிகா க்ராஸ் என அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல் வழக்கமான ஷோரூம்களுக்கு பதிலாக நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படவுள்ளன.
இதில், ஏராளமான பிரீமியம் வசதிகள் இடம்பெறவுள்ளன. ஆனால் மெக்கானிக்கலாக எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது. தற்போதைய எர்டிகா காரில் இருக்கும் அதே மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கூடிய இன்ஜின் தக்கவைக்கப்படவுள்ளது.

மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் (Maruti Suzuki Wagon R EV)
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காரும் இதுதான். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஆனால் தற்போது உள்ள மாடல்களின் விலை அதிகமாக உள்ளது. எனவே பெரும்பாலானோரால் அவற்றை வாங்க முடியவில்லை. அத்துடன் ரேஞ்ச் என சொல்லப்படும் ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரம் குறைவாக உள்ளது.
இந்த குறைகள் அனைத்தையும் போக்கும் வகையில், அடுத்த ஆண்டு மார்க்கெட்டில் களமிறங்கவுள்ளது மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக். ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் கார்களுக்கு அரசின் மானியம் கிடைப்பதால், இதன் விலை 7.50 லட்சத்திற்குள்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய காலநிலை மற்றும் சாலைகளில், பேட்டரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிவதற்காக தற்போது ரோடு டெஸ்ட் நடைபெற்று வருகிறது. வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு சிறந்த பேட்டரியை உருவாக்க இது உதவி செய்யும்.

மாருதி விட்டாரா 7 சீட்டர் (Maruti Vitara 7-seater)
பெரிய எஸ்யூவி வகை கார்களை இந்திய மக்கள் எப்போதுமே மிகவும் விரும்பக்கூடியவர்கள். குறிப்பாக மூன்று வரிசை சீட்டிங் கெபாசிட்டி (Seating Capacity) கொண்ட கார்கள், இந்தியர்களின் விருப்பமாக இருக்கிறது.
தற்போதைய தலைமுறை விட்டாரா கார், 5 சீட்டர் மாடலாக உள்ளது. ஆனால் அடுத்த தலைமுறை விட்டாரா, நீளமாகவும், அகலமாகவும் இருக்கும். அனேகமாக 7 சீட்டர் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெகுலர் வெர்ஷனை காட்டிலும், 2வது மற்றும் 3வது வரிசைகளில் இடவசதி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர பிரீமியம் வசதிகளும் இடம்பெறவுள்ளன.


Click it and Unblock the Notifications







