அவசர உதவி தேவை என ஓரணியில் திரண்டு கோரிக்கை... மோடி மனது வைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்...
அவசர உதவியை எதிர்பார்ப்பதாக ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை சமீப காலமாக மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கார், டூவீலர் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் சரிவடைந்து வருகின்றன.

குறிப்பாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, விற்பனையில் தள்ளாடி கொண்டுள்ளது. மாருதி சுஸுகி மட்டுமல்லாது இந்தியாவின் மற்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இதே நிலைதான்.

மிகவும் பிரபலமான டூவீலர் உற்பத்தி நிறுவனங்களும் கூட இதே நிலையில்தான் உள்ளன. வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிவடைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகளும் கூட இதற்கு ஒரு காரணம்தான்.

புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ், வாகனங்களில் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கதக்க நடவடிக்கைதான் என்றாலும் கூட, இதன் காரணமாக வாகனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதுதவிர வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளும் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ளன. இதற்கு இணங்கும் வகையில், அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும், தங்கள் மாடல்களை அப்டேட் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இதன் காரணமாக வாகனங்களின் விலை இன்னும் உயரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்பதால், மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பே காணப்படுகிறது.

ஆனால் இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. இருந்தபோதும் விற்பனை சரிவு என்ற பிரச்னையில் இருந்து மீண்டு வர அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தீவிரமாக முயன்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SIAM-Society of Indian Automobile Manufacturers) வலியுறுத்தி வருகிறது.

அதாவது வாகனங்கள் மீது விதிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரியை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நீண்ட நாட்களாக முயன்று வருகிறது.

ஆனால் ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளே இந்த கோரிக்கைக்கு எதிராக இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாயின. இதனால் ஜிஎஸ்டி குறைப்பு கோரிக்கையை நிறைவேற்றும் விஷயத்தில் ஆட்டோமொபைல் துறை பிளவுபட்டது போன்ற தோற்றம் உருவானது.

குறிப்பாக ஜிஎஸ்டி வரியை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா எதிராக இருப்பதாக பத்திரிக்கை செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதில், ஆட்டோமொபைல் துறைக்கு உள்ளேயே எதிரெதிர் கருத்துக்கள் இருப்பதாக வெளியான செய்தியை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் ராஜன் வதேரா தற்போது மறுத்துள்ளார்.

வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற விஷயத்தில், அனைத்து உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து இருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதே சமயம் இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளில் இருந்து மீண்டு வர மத்திய அரசிடம் இருந்து அவசர உதவியை எதிர்பார்ப்பதாகவும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் அரசிடம் இருந்து உதவியை எதிர்பார்ப்பதாகவும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








