சலுகைகளை வாரி வழங்கியும் புண்ணியமில்லை... வாகனத் துறையில் தொடரும் சோகம்!
பண்டிகை காலம் துவங்கியும் வாகன விற்பனையில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தொடர்ந்து சரிவு முகத்திலேயே இருப்பதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் முதலே வாகன விற்பனையில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. ஆகஸ்ட்- அக்டோபர் இடையிலான பண்டிகை காலத்தில் வாகன விற்பனை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பண்டிகை காலத்தில் பொதுவாகவே கார், பைக் விற்பனை அதிகமாக இருக்கும். இதனால், தயாரிப்பாளர்கள் பெரும் தள்ளுபடி சலுகைகளையும், சிறப்பு சேமிப்புத் திட்டங்களையும் அறிவித்தன. ஆனால், அதற்கும் போதிய பலன் இல்லாத நிலை தொடர்கிறது.

இந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கும் விற்பனை புள்ளிவிபங்களில் வாகன மார்க்கெட் தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த மாதத்தில் மூன்று சக்கர வாகனங்களை தவிர்த்து, ஏனைய அனைத்து ரக வாகனங்களின் விற்பனையும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 12,48,998 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் 10,98,271 இருசக்கர வாகனங்களே விற்பனையாகி இருக்கின்றன. இது 12.1 சதவீதம் அளவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

அதேபோன்று, வர்த்தக வாகனங்களின் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டபம்பரில் 77,980 வர்த்தக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதம் 63,518 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 18.5 சதவீதம் குறைவாகும்.

கார்கள் உள்ளடக்கிய பயணிகள் வாகனப் பிரிவிலும் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டபம்பரில் 1,97,653 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 1,57,972 பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 20.1 சதவீதம் குறைவு. கிட்டத்தட்ட 5ல் ஒரு பங்கு விற்பனையை பயணிகள் வாகனப் பிரிவு இழந்துள்ளது.

அதேநேரத்தில், ஆறுதலாக மூன்றுசக்கர வாகன விற்பனையானது சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 54,560 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 55,553 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 1.8 சதவீதம் கூடுதல்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருப்பது, புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகள் உள்ளிட்டவற்றால் ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், மத்திய அரசு இந்த கோரிக்கையை இதுவரை அசட்டை செய்யவும் இல்லை; மாற்றி அமைப்பதற்கான திட்டமும் இல்லை என்று தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அளிக்கப்பட்ட சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்கள் கூட பெரிதாக கைகொடுக்கவில்லை என்பது கடந்த மாதம் வாகன விற்பனை மூலமாக தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications








