இந்தியாவில் ஒரே குடையின் கீழ் வந்த ஆடி, போர்ஷே, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனங்கள்
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்கள் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக ரீதியில் இந்த நிறுவனம் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா என்ற பெயரில் செயல்பட இருக்கிறது.

இந்திய கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் விதத்தில், நிர்வாக சீர்த்திருத்தங்களை ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, புரொஜெக்ட் 2.0 என்ற திட்டத்தை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

இந்த புதிய கொள்கை திட்டத்தின்படி, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் இந்தியாவில் செயல்படும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடேட், ஃபோக்ஸ்வேகன் குரூப் சேல்ஸ் இந்தியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடேட் ஆகியவை நிர்வாக ரீதியில் இணைக்கப்பட்டு ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடேட் (SAVWIPL) என்ற ஒரே நிறுவனமாக செயல்பட இருக்கிறது.

மேலும், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி, போர்ஷே மற்றும் லம்போர்கினி ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான நிர்வாக இயக்குனராக குருபிரதாப் போபராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஆடி, போர்ஷே, லம்போர்கினி, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்கள் ஒரே கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டாலும், வழக்கம்போல் ஷோரூம்கள் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை தனித்தனியாக இப்போது இருப்பது போலவே தொடரும்.

இதில், ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்கள் மட்டும், புதிய கார்கள் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அளவிலான பகிர்மானங்களை இணைந்து மேற்கொள்ளும். ஒரே தயாரிப்புகளை ரீபேட்ஜ் எஞ்சினியரிங் என்ற முறையில் இரண்டு பிராண்டுகளிலும் சொந்த அடையாளங்களுடன் விற்பனை செய்யும்.

இந்த புதிய நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை குறித்து குருபிரதாப் போபராய் கூறுகையில்," இந்த இணைப்பு மூலமாக, சவால்களும், சந்தைப் போட்டியும் நிறைந்த இந்த தருணத்தில், இந்தியாவில் தொாழில்நுட்பம் மற்றும் மேலாண்மையை செம்மைப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டீலர்களுக்கும், பணியாளர்களுக்கும் லாபகரமான வர்த்தகம் மற்றும் தொழில்முறை பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்," என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் இணைக்கப்பட்டாலும், தனித்தனி அடையாளங்களோடு இப்போது உள்ளது போலவே வர்த்தகத்தை மேற்கொள்ளும். புதிய கார்களை உருவாக்ககும் பணிகளுக்கான முதலீடு இதன் மூலமாக வெகுவாக குறையும் என்பதுடன், அதிக மாடல்களை களமிறக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

மேலும், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய எம்.க்யூ.பி பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்படும் புதிய எம்.க்யூ.பி- ஏ0 ஐஎன் என்ற பிளாட்ஃபார்மின் கீழ் பல புதிய மாடல்களை இந்தியாவுக்கு ஏற்ற அம்சங்களுடன் இந்தியாவிலேயே உருவாக்கும் வாய்ப்பையும் இந்த புதிய நிறுவனத்தின் கீழ் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்படும் கார்கள் வரும் 2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குறிப்பாக, புதிய எஸ்யூவி மாடல்களை இரு நிறுவனங்களும் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








