ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம்: 24 மணிநேரத்தில் செலுத்த கெடு!
மாசு உமிழ்வு மோசடி தொடர்பாக, ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை நாளை மாலைக்குள் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய கார் குழுமமான ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களில் மாசு உமிழ்வு அளவில் மோசடி செய்தது அம்பலமானது. 2015ம் ஆண்டு வெளிவந்த இந்த மோசடி சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மோசடி சாஃப்ட்வேரை பயன்படுத்தி, மாசு உமிழ்வு அளவை குறைத்து காட்டியது புலன் விசாரணையில் கண்டறியப்பட்டதுடன், இந்த மோசடியை ஃபோக்ஸ்வேகன் குழுமம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, மாசு உமிழ்வு அளவுக்கான மோசடி சாஃப்ட்வேரை மாற்றித் தருவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான டீசல் கார்களையும் திரும்ப அழைத்தது.

அத்துடன், விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு நைட்ரஸ் ஆக்சைடு நச்சுப் புகையை ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்கள் வெளிப்படுத்தியதும் தெரிய வந்தது. இதனால், பெரு நகரங்களில் காற்று மாசு பெருமளவு பிரச்னையை ஏற்படுத்தியதுடன், மக்களுக்கு உடல்நலக் கேட்டையும் விளைவிக்க அந்நிறுவனம் காரணமாகியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இதுதொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 4 பேர் கொண்ட நடுவர் குழு விசாரணை நடத்தியது.

அப்போது, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 3.27 லட்சம் டீசல் கார்களை திரும்ப அழைக்க திட்டமிட்டு இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்தது. எனினும், மோசடி செய்ததுடன், மக்களின் உடல்நலத்திற்கு ஊறு விளைவித்ததற்காக ரூ.100 கோடி அபராதம் விதித்து, கடந்த ஆண்டு நவம்பர் 16ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதில், அரசு விதிகளின்படி, பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்துடன் டீசல் கார்களை விற்பனை செய்ததாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இன்று நடந்த விசாரணை முடிவில் நாளை மாலை 5 மணிக்குள் இடைக்கால அபராத தொகையான ரூ.100 கோடியை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும் என்று ஃபோக்ஸ்வேகனுக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், அபராதம் செலுத்தப்படாவிட்டால், ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 21ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








