புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் மிக முக்கியமான மைல்கல் ஒன்றை இன்று (ஏப்ரல் 19) எட்டியுள்ளது. புனேவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையில், கார் உற்பத்தி 1 மில்லியனை (10 லட்சம்) கடந்திருப்பதுதான் அந்த மைல்கல். ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் புனே பிளாண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 10 லட்சமாவது கார் அமியோ. இந்த சாதனை குறித்து ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புனேவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி செயல்பாட்டிற்கு வந்தது. அங்கு 10 லட்சம் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்ட 10 ஆண்டுகள் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. புனே பிளாண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார் ஸ்கோடா ஃபேபியா (SKODA Fabia) ஆகும். ஸ்கோடா நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஸ்கோடா ஃபேபியாவை தொடர்ந்து, ஃபோக்ஸ்வேகன் போலோ, வெண்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகிய மூன்று கார் மாடல்களின் உற்பத்தியும் புனே தொழிற்சாலையில் தொடங்கப்பட்டது. இம்மூன்று கார் மாடல்களும் கடந்த 2010ம் ஆண்டின் இறுதியில் புனே தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட தொடங்கின.

தொடக்கத்தில் பிரத்யேகமாக இந்திய மார்க்கெட்டிற்கு என்றுதான் இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டது. ஆனால் நாளடைவில் பல்வேறு நாடுகளுக்கும் இங்கிருந்து கார்கள் ஏற்றுமதி செய்யப்பட தொடங்கின. இதன்படி புனே தொழிற்சாலையில் இருந்து கார் ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் வெளிநாடு தென் ஆப்ரிக்காதான். இங்கிருந்து தென் ஆப்ரிக்காவிற்கு கார் ஏற்றுமதி கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆனால் புனே தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மேட் இன் இந்தியா ஃபோக்ஸ்வேகன் கார்கள் அதிகம் விற்பனையாகும் மார்க்கெட்டாக மெக்ஸிகோ பின்நாளில் உருவெடுத்தது. அத்துடன் மெக்ஸிகோ மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் கார் என்ற பெருமையை வெண்டோ தன்வசப்படுத்தியது.

இப்படிப்பட்ட சூழலில், ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் தற்போது ஆசியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய உலகின் நான்கு கண்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய மார்க்கெட் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இந்திய மார்க்கெட்டை உறுதியாக பிடித்து கொள்வதற்காக இந்தியா 2.0 என்ற திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் செயல்படுத்துகிறது. இந்திய மார்க்கெட்டின் தேவைகளுக்கு ஏற்ப அதிகப்படியான கார்களை உற்பத்தி செய்வதே இந்தியா 2.0 திட்டத்தின் முக்கியமான நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








