இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனை நிறுத்தம்
ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் இந்திய சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் டி-செக்மென்ட் செடான் கார் மார்க்கெட்டில் ஃபோஸ்ஸ்வேகன் பஸாத் கார் சிறந்த கட்டமைப்பு அம்சங்கள் கொண்ட நேர்த்தியான கார் மாடலாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வந்தது. இந்தியாவில் வசதிகளை பொறுத்து 4 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பிஎஸ்-4 எஞ்சின் தேர்வு கொண்ட பஸாத் காரை ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் விலக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் பண்டிகை காலத்தையொட்டி அனைத்து கார்களுக்கும் ஃபோக்ஸ்ஃபெஸ்ட் என்ற தள்ளுபடி சலுகைகளை ஃபோக்ஸ்வேகன் அறிவித்தது.

ஆனால், அதில் பஸாத் காருக்கு மட்டும் சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், டீலர்களில் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும் சில பஸாத் கார்கள் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும். அதன்பிறகு, பிஎஸ்-4 டீசல் எஞ்சின் தேர்வு கொண்ட பஸாத் கிடைக்காது.

விலை உயர்ந்த மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் முன் இருக்கைகள், மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் ஆகியவை இந்த காரின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 174 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வில் இந்த கார் கிடைத்து வந்தது.

அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா அக்கார்டு, டொயோட்டா கேம்ரி உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
Source: IAB


Click it and Unblock the Notifications








