எக்ஸ்சி40 புண்ணியத்தில் வால்வோ நிறுவனத்தின் விற்பனையில் நல்ல முன்னேற்றம்!
இந்தியாவில் வால்வோ கார் நிறுவனத்தின் விற்பனை சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வால்வோ கார் நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. உலகின் மிக பாதுகாப்பான தொழில்நுட்பங்களுடன் கார்களை உருவாக்கும் நிறுவனமாகவும் பெயர்பெற்றுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவில் சொகுசு பஸ்கள் மூலமாக இந்தியர்களுக்கு பரிட்சயமான அந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்கு கார் விற்பனையையும் துவங்கியது. சொகுசு கார் தயாரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் கோலோய்ச்சி வரும் நிலையில், வால்வோ நிறுவனம் தனது சிறப்பான வர்த்தக உத்திகளால் நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது.

கடந்த 2018-19ம் நிதி ஆண்டு காலத்தில் இந்தியாவில் வால்வோ கார் நிறுவனம் 2,687 சொகுசு கார்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 2,157 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த ஆண்டில் 25 சதவீதம் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

வால்வோ நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ எக்ஸ்சி40 என்ற எஸ்யூவி ரக மாடல்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. வால்வோ நிறுவனத்தின் விலை குறைவான மாடலும் இதுதான்.

இதுதவிர்த்து, வால்வோ நிறுவனம் எஸ்60, எஸ்90 ஆகிய செடான் கார்களையும், வி40, வி90 மற்றும் எஸ்60 க்ராஸ் கன்ட்ரி கார்களையும் விற்பனை செய்கிறது. எஸ்யூவி ரகத்தில் எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 ஆகிய கார் மாடல்களையும் விற்பனை செய்கிறது. விரைவல் எக்ஸ்சி90 எஸ்யூவியின் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனி கார் நிறுவனங்களை வீழ்த்தும் விதத்தில் புதிய வர்த்தக கொள்கைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதேபோன்று, இந்தியாவில் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை அதிகரிக்கும் திட்டமும் வால்வோ வசம் உள்ளது. எனவே, வரும் காலங்களில் வால்வோ விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








