உலகின் முதல் முழு-நீளமான தானியங்கி எலக்ட்ரிக் பஸ்: வால்வோவின் பிரம்மிக்க வைக்கும் சாதனை!
சொகுசு பஸ்களைத் தயாரித்துவரும் வால்வோ நிறுவனம் உலகின் முதல் முழு-நீளமான தானியங்கி எலக்ட்ரிக் பஸ்ஸை, சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக மாணவர்கள் துணையுடன் தாயரித்துள்ளது.

ஸ்வீடன் நாட்டில் உள்ள கோத்தன்பர்க் நகரத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் வால்வோ நிறுவனம் கார் மற்றும் பஸ் தயாரிப்பினில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனம் அதிநவீன சொகுசு கார் மற்றும் பஸ்களைத் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வால்வோ நிறுவனம் தான் உலகிலேயே மிகப்பெரிய பஸ்களையும் தயாரித்து வருகின்றது.
பயணிகளின் சொகுசான பயணத்தை உறுதி செய்வதே தங்களது கொள்கை என்பது வால்வோவின் வாசகமாகும். உலகின் பல நாடுகளிலும் வால்வோ பேருந்துகள் அதிகம் புழங்கத்தில் உள்ளன. அதன்படி, இந்தியா, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் வால்வோ பஸ்கள் மிகவும் பிரபலம்.

இந்த பேருந்துகள் பயணிகளின் நீண்ட தூரப் பயணத்தை சிறப்பாகவும், சொகுசாகவும் மாற்றுவதற்காக மல்டி ஆக்ஸில் கொண்டதாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த நிறுவனத்தின் பேருந்துகள் மற்ற நிறுவனத்தின் பேருந்துகளைக் காட்டிலும் சற்று அதிக நீளமாகக் காணப்படும். அதேபோல, இந்த பேருந்தின் உட்புற அலங்காரமும் படு அம்சமாக இருக்கும். ஹைடெக் பயணிகள் இருக்கை, கார்பெட், எல்சிடி டிவி என பயணிகளுக்கு சொகுசான வசதியை வழங்குவதில் இந்த பஸ் 5 நட்சத்திர உணவு விடுதிகளையே விஞ்சிவிடும்.

இந்நிலையில், வால்வோ நிறுவனமும் சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து தானியங்கி எலக்ட்ரிக் பேருந்து ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த பேருந்தினை தற்போது சோதனையோட்டம் செய்து வருகின்றனர்.
சிங்கப்பூர் மக்கள் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பதால் அந்த நாட்டில் தானியங்கி வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன்காரணமாகவே, அந்நாட்டு அரசு இதுபோன்ற தானியங்கி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றது.

இந்த பேருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதுக்கு முன்னதாக, பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் சோதனைச் செய்துவருகின்றனர். மேலும், இந்த சோதனையோட்டம் வெற்றியடைந்த பின்னர் இந்த வருடத்திற்குள் பேருந்தினை பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் சுப்ரா சுரேஷ் கூறியுள்ளார்.
உலகிலேயே அதிக நீளமுடைய முதல் தானியங்கி பேருந்தாக இந்த வால்வோ பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே இப்பேருந்தின் சிறப்பும்கூட. அதன்படி, இந்த பேருந்து 39 அடி நீளமாகும். இதில், 80 பயணிகள் சொகுசாக அமர்ந்து பயணிக்கலாம் என வால்வோவும், நன்யாங் பல்கலைக்கழகமும் கூட்டாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








