எஞ்சினில் தீப்பிடிக்கும் வாய்ப்பு... கார்களை திரும்ப அழைக்கும் வால்வோ!
எஞ்சினில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதையடுத்து, வால்வோ சொகுசு கார்களுக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகின் மிகவும் பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெருமையை வால்வோ பெற்றிருக்கிறது. இந்த நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில் தயாரிக்கப்பட்ட வால்வோ டீசல் கார்களில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வால்வோ நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எஸ்60, எஸ்80, வி40, வி70, வி90, எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 ஆகிய கார்களின் எஞ்சின் பகுதியில் உள்ள குறைபாட்டால் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எஞ்சினின் இன்டேக் பகுதியில் இருக்கும் பிளாஸ்டிக் பாகம் அதிக சூடாகும்போது உருகி, தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அரிதாக நிகழும் என்றாலும், முன்னெச்சரிக்கையாக அதனை சரிசெய்து தருவதற்கு வால்வோ முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, கார்களில் உள்ள பிரச்னையை ஆய்வு செய்து சரிசெய்வதற்காக திரும்ப அழைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரை உற்பத்தி செய்யப்பட்ட 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை வால்வோ திரும்ப அழைக்க இருக்கிறது.

உலக அளவில் 5.07 லட்சம் கார்களை வால்வோ நிறுவனம் திரும்ப அழைக்க இருக்கிறது. இந்தியாவில் 3,000 கார்களை திரும்ப அழைத்து ஆய்வு நடத்த இருக்கிறது வால்வோ கார் நிறுவனம். இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்ப உள்ளது வால்வோ.

காரின் எஞ்சின் பகுதியிலிருந்து வித்தியாசமான வாடை எதுவும் வந்தால் உடனடியாக காரை சர்வீஸ் மையத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ள இருப்பதாக வால்வோ கூறி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.


Click it and Unblock the Notifications








