உலகின் பெரும் பணக்காரருக்கு ஏற்பட்ட சோகம்... விலை உயர்ந்த கார்களை விற்பனை செய்ய காரணம் இதுதான்...
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழும் வாட்ஸ் அப் இணை நிறுவனர் ஜான் கோயம், தன்னிடம் உள்ள விலை உயர்ந்த கார்களை விற்பனை செய்ய திடீரென முடிவெடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் முன்னணி சமூக வலை தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப், கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த பிரியன் ஆக்டன் மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜான் கோயம் ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து வாட்ஸ் அப் நிறுவனத்தை தொடங்கினர்.

இவர்கள் இருவரும் யாகூ (Yahoo) நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடங்கப்பட்டது முதலே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற வாட்ஸ் அப், நாளுக்கு நாள் பிரம்மாண்ட வளர்ச்சியை பெற்றது.

இன்று வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் தற்போது 30 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், வாட்ஸ் அப் நிறுவனத்தை, மற்றொரு முன்னணி சமூக வலை தளமான பேஸ்புக், கடந்த 2014ம் ஆண்டு வாங்கியது.

இதற்காக பேஸ்புக் நிறுவனம் வழங்கிய விலை எவ்வளவு தெரியுமா? 1 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய். இதன்மூலம் வாட்ஸ் அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜான் கோயம் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

பேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்ட போதும், வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜான் கோயம் தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஆனால் தன்னுடைய ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ள பேஸ்புக் மறுத்து விட்டதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவியில் இருந்து அவர் திடீரென விலகினார்.

அப்போது சமூக வலை தளங்களிலும், செய்திகளிலும் ஜான் கோயம் அதிகம் பேசப்பட்டார். இந்த சூழலில், ஜான் கோயமின் பெயர் சமூக வலை தளங்களில் தற்போது மீண்டும் அடிபட தொடங்கியுள்ளது. தனது 10 போர்ஷே கார்களை அவர் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதுதான் இதற்கு காரணம்.

போர்ஷே என்பது ஜெர்மனியை சேர்ந்த லக்ஸரி கார் நிறுவனங்களில் ஒன்றாகும். அதிக செயல்திறன் வாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை போர்ஷே விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை.

அப்படி இருந்தும் கூட போர்ஷே நிறுவனத்தின் கார்களுக்கு என உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் வாட்ஸ் அப் இணை நிறுவனர் ஜான் கோயமும் ஒருவர். அவரிடம் ஏராளமான போர்ஷே கார்கள் உள்ளன.

இதில், 10 கார்களை விற்பனை செய்யதான் ஜான் கோயம் தற்போது முடிவு செய்துள்ளார். இதில், போர்ஷே 911 மாடலும் ஒன்று. உலகில் உள்ள தீவிர போர்ஷே கார் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ஒரு 911 மாடலாவது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ஏல நிறுவனங்களில் ஒன்றான குட்டிங் & கம்பெனியின் வாயிலாகதான் (Gooding & Company) ஜான் கோயமின் கார்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. அதாவது வாட்ஸ் அப் இணை நிறுவனர் ஜான் கோயமின் 10 போர்ஷே கார்களும், வரும் மார்ச் 8ம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.

இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், ஜான் கோயம் தன்னிடம் உள்ள போர்ஷே கார்களின் ஒரு பகுதியை மட்டுமே ஏலம் மூலம் விற்பனை செய்யவுள்ளார். அவரிடம் இன்னும் ஏராளமான போர்ஷே கார்கள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

ஒவ்வொரு போர்ஷே கார் மாடலையும் ஜான் கோயம் பார்த்து பார்த்து வாங்கி சேகரித்துள்ளார். ''வசீகரமான போர்ஷே கார் மாடல்களை பார்க்கும் போதெல்லாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு ஏற்படும்.

போர்ஷே என்பது வெறும் கார் மாடல் மட்டும் கிடையாது. அவை எனது வெற்றியின் மறுவடிவம்'' என ஜான் கோயம் முன்பு ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான போர்ஷே கார்களை, ஜான் கோயம் குழந்தைகளை போல் பராமரித்து வந்தார்.

அப்படி இருந்தும் கூட போர்ஷே கார்களை ஜான் கோயம் தற்போது திடீரென விற்பனை செய்வது ஏன்? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது. இதற்கும் ஜான் கோயமே பதில் அளித்துள்ளார். ஆனால் அவரது பதில் மிகவும் ருசிகரமானது.

போர்ஷே கார்களை ஓட்ட தனக்கு போதிய அளவிற்கு நேரம் இல்லை என்பதுதான் அந்த பதில். எனவே அவைகளை வெறுமனே நிறுத்தி வைத்திருக்க தனக்கு மனம் வரவில்லை எனவும் ஜான் கோயம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''போதுமான அளவிற்கு நேரம் இருந்திருந்தால் இந்த முடிவை நான் எடுத்திருக்கவே மாட்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக எனக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இந்த கார்களை இன்னொருவர் ஓட்ட போகிறார் என்பது மனதிற்கு சற்றே இதமளிக்கிறது'' என்றார்.

பெட்ரோலிஸியஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தன்னிடம் உள்ள போர்ஷே கார்களில் ஒரு பகுதியை மட்டுமே ஜான் கோயம் விற்பனை செய்யவுள்ளார். இவை தவிர அவரிடம் இன்னும் ஏராளமான போர்ஷே கார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜான் கோயமிற்கு தற்போது 42 வயதாகிறது.

ஆனால் 16 வயதில் இருந்தே அவர் போர்ஷே கார்களுக்கு தீவிரமான ரசிகராக இருந்து வருகிறார். உக்ரைனை சேர்ந்தவரான ஜான் கோயம் அமெரிக்காவில் குடியேறி விட்டார். தற்போது நிரந்தரமாக அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications








