காரின் வெளிப்புறத்திற்கான உலகின் முதல் 'சைடு' ஏர்பேக்... இசட்எஃப் நிறுவனம் அறிமுகம்!
காரின் வெளிப்புறத்தில் பொருத்தக்கூடிய உலகின் முதல் 'சைடு' ஏர்பேக்கை இசட்எஃப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த இசட்எஃப் நிறுவனம் சொகுசு கார்களுக்கான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தயாரிப்பில் உலகின் மிக பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது. இதுதவிர, காருக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், புதிய முயற்சியாக காரின் வெளிப்புறத்தில் பொருத்தக்கூடிய புதுமையான ஏர்பேக் மாதிரியை வெளியிட்டுள்ளது.

ஜெர்மனியிலுள்ள மெம்மின்ஜென் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த புதிய கார் ஏர்பேக் குறித்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தது. பொதுவாக ஏர்பேக்குகள் காருக்குள் பொருத்தப்படுகின்றன. மோதலின்போது மில்லி செகண்ட் நேரத்தில் விரிவடைந்து பயணிகளை பாதுகாக்கிறது. பானட்டில் பொருத்தக்கூடிய முன்புற ஏர்பேக்குகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆனால், இசட்எஃப் தயாரித்துள்ள புதிய வெளிப்புறத்திற்கான ஏர்பேக் காரின் இருபுறமும் பக்கவாட்டுப் பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும். மேலும், மோதலுக்கு சில மில்லிசெகண்ட் முன்பாகவே இது விரிவடைந்துவிடும்.

இது க்ரம்பிள் ஸோன் போல செயல்படும். அதாவது, மோதல் தாக்கத்தை 40 சதவீதம் வரை இந்த ஏர்பேக் உள்வாங்கிக் கொள்ளும். காரின் பக்கவாட்டுப் பகுதி சேதத்தை பெருமளவு குறைப்பதோடு, பயணிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும்.

இந்த ஏர்பேக் சென்சார்கள் மற்றும் கட்டுப்பாட்டு சாதனத்தின் உதவியுடன் செயல்படும். சைடு சில் பகுதியில் இந்த ஏர்பேக்குகள் காரின் இருபுறமும் பொருத்தப்பட்டு இருக்கும். இவை 280 முதல் 400 லிட்டர்கள் கொள்திறன் வாய்ந்ததாக இருக்கும்.

காரின் கீழே இருக்கும் சில் பகுதியில் இருந்து மேல்நோக்கி விரிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏ மற்றும் சி பில்லர்களுக்கு இடையிலான க்ரம்பிள் ஸோன் போல இது செயல்படும் என்பதால், பக்கவாட்டு மோதல்களின்போதும் அதிக பாதுகாப்பு உறுதியாகும்.

இந்த புதிய ஏர்பேக்குகள் விரைவில் விலை உயர்ந்த கார்களில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். முதல்கட்ட சோதனைகளில் இது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications








