காரின் பின்பக்க டயரை சுற்றிய 10 அடி மலை பாம்பு... வைரலாகும் வீடியோ! ப்பா... உடம்பே சிலிர்க்குது...
சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று காரின் பின் பக்க டயரில் சுற்றியிருக்கும் வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நகர மயமாதல் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காடுகள் மற்றும் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக மனிதன்-மிருகம் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இகருக்கின்றது.

இதுமட்டுமின்றி, வீடு, வாகனம் மற்றும் மக்கள் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களில் விஷ ஜந்துக்கள் குடியேறும் விநோத சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்தவகையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரங்கேறிய ஓர் விநோத சம்பவத்தையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

10 அடி நீளமுள்ள மலைப் பாம்பால் மும்பையின் முக்கிய சாலை ஒன்றில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது. ஆம், நாம் பார்க்கவிருக்கும் விநோத சம்பவம் இதைப் பற்றியதுதான். மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இருக்கும் சுனபாட்டி எனும் பகுதியிலே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

சுமார் பத்து அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரின் பின் அடிப்பகுதியில் புகுந்து இருக்கின்றது. இதனை அறியாத அக்காரின் உரிமையாளர், காரை எடுத்துக் கொண்டு கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை வழியாக பயணித்திருக்கின்றார். அப்போது வித்தியாசமான உணர்வுகளைப் பெற்ற அவர், காரை நிறுத்தி ஆராய்ந்தபோதே ஷாக்களிக்கும் நிகழ்வு காத்திருந்தது. ஆம், காரின் பின் பக்க வீலில் மலைப் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பதை அப்போதே அவர் கண்டுபிடித்தார்.

இதைக் கண்டு அதிர்ந்துபோன அந்த நபர், மலைப் பாம்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சியில் போலீஸார் சிலரும் பங்கேற்றனர். ஆனால், தாங்கள் மீட்பது பாம்பு என்பதை உணர்ந்த அவர்களால் அந்த செயலில் முழு தீவிரமாக ஈடுபட முடியவில்லை. தொடர்ச்சியாக 1 மணி நேர மீட்பு பணியில் ஈடுபட்டும் அவர்களால் பாம்பை மீட்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து பாம்புகளை கையாளும் சிறப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பாம்பு டயரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. பின்னர், அப்பாம்பு பாதுகாப்பாக அருகில் இருந்த வன பகுதியில் விடப்பட்டது. சுமார், அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பு மீட்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

அதற்குள்ளாக, அந்த எக்ஸ்பிரஸ் சாலையில் வாகன நெரிசல் மிக கடுமையாக ஏற்பட்டுவிட்டது. சிலர் பாம்பை பார்க்கும் விதமாக வாகனத்தை ஆமைபோல் இயக்கியது மற்றும் பலர் கேமிராக்களைத் தூக்கிக் கொண்டு சாலையை மறித்தது போன்ற காரணங்களால் சில மணி நேரங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

பொதுவாகவே, பாம்புகள் பகலில் குளிர்ச்சியான இடங்களிலும், இரவில் சற்று சூடான பகுதிகளிலும் வசிக்கும் தன்மைக் கொண்டவையாகும். இதனால்தான் இரவு மற்றும் மாலை நேரங்களிலேயே பெரும்பாலான பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் நம்மால் காண முடிகின்றது.
இம்மாதிரியான சூழ்நிலையில் சூடான எஞ்ஜின் உடன் நிறுத்தி வைக்கப்படும் கார் மற்றும் பைக்குகள் பாம்பின் தற்காலிக புகலிடமாக மாறிவிடுகின்றன. இது அரிதினும் அரிதான செயல் ஆகும். இருப்பினும், அண்மைக் காலங்களாக இது அதிக அரங்கேற ஆரம்பித்துள்ளது. நகர மயமாதலின் அடிப்படையில் நீர் நிலைகள் அழிக்கப்பட்டு குடியிருப்பு பகுதியாக மாற்றி வருவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

எனவேதான் காட்டு விலங்குகள் இரைக்காக ஊருக்குள் வருவதும், பாம்புகள் இருப்பிடத்திற்காக குடியிருப்பிற்குள் நுழையும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.


Click it and Unblock the Notifications








