துருப்பிடித்த போலீஸ் ஜிப்ஸி அழகிய காராக மாற்றம்... எப்படி இருந்த கார் எப்புடி ஆயிருக்கு பாருங்க..!
துருப்பிடித்த பழைய போலீஸ் காரை இளைஞர்கள் சிலர் புதிய கவர்ச்சியான காராக மாற்றியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதிகளவில் ஜிப்ஸி ரக வாகனத்தை இந்திய இராணுவத்தினர் பயன்படுத்தினாலும், இந்த பெயரை கேட்ட உடனடியாக நம் நினைவுக்கு வருவது காவல்துறை மட்டுமே. ஏனெனில், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் காவல்துறையினரே இந்த வாகனத்தை அதிகம் பயன்படுத்துவதைப் பார்த்தும், கடந்தும் இருக்கின்றோம். எனவேதான், ஜிப்ஸி என்றாலே போலீஸ், போலீஸ் என்றால் ஜிப்ஸி என நாம் நினைக்கின்றோம்.

தற்போதைய சூழ்நிலையில் காவல்துறையினர் புதிய வாகனங்களுக்கு அப்கிரேட் ஆகிவிட்டனர். அதாவது, போலீஸாரின் பயன்பாட்டிற்காக டொயோட்டா இன்னோ, மஹிந்திரா பொலிரோ உள்ளிட்ட வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஒரு சில இடங்களில் இன்றளவும் போலீஸார் ஜிப்ஸி வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேசமயம், காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு, கைவிடப்பட்ட ஜிப்ஸிக்களையும் நம்மால் காவல் நிலையங்கள் அல்லது அரசு அலுவலகங்களின் வளாகங்களில் காண முடிகின்றது. அந்தவகையில், முந்தைய நாட்களில் போலீஸாரால் பயன்படுத்தப்பட்டு, கைவிடப்பட்ட ஜிப்ஸி காருக்கே இளைஞர்கள் சிலர் மாடிஃபிகேஷன் மூலம் புத்துயிர் வழங்கியிருக்கின்றனர்.

புத்துயிர் பெற்றிருப்பது மாருதி ஜிப்ஸி ஆகும். இக்காருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். ஆனால், ஒரு சில காரணங்களுக்காக அக்கார் சந்தையில் இருந்து விளக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே முற்றிலும் அழகிய காராக அது மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை பிஒய்சி ஜம்மு அஃபிசியல் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமே இக்கார் பற்றிய தகவல் தற்போது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

2002ம் ஆண்டு மாடலான இக்கார் காவல்துறையின் ஏலத்தின் மூலம் வாங்கப்பட்டிருக்கின்றது. அப்போது காரின் பல்வேறு உடற் கூறுகள் துரும்பிற்கு இரையாகிய வண்ணம் இருந்துள்ளது. மேலும், பல பாகங்கள் பயனற்ற நிலையில் காட்சியளித்துள்ளது. அம்மாதிரியான பாகங்களே நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய உறுப்புகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனால் முற்றிலும் புதிய மற்றும் கவர்ச்சியான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

இந்த தோற்றம் மற்றும் மாற்றத்தையே விளக்குகின்ற வகையில் வீடியோக் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த வீடியோவில் குறிப்பிட்ட பாகங்கள் நீக்கப்படுவது போன்ற காட்சிகளே முதலில் இடம்பெற்றிருக்கின்றன. காரின் முன் பக்க பேனல்கள், கதவுகள், சாஃப்ட் டாப், இருக்கை மற்றும் டேஷ்போர்டு உள்ளிட்ட அனைத்தும் வெளியேற்றப்படுவதை நம்மால் காண முடிகின்றது.

இதன் பின்னரே நீக்கப்பட்ட ஒவ்வொரு பாகத்திற்கும் பதிலாக புதிய மற்றும் தற்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கூறுகளைக் கொண்டு காலி இடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதேசமயம், மீட்கக் கூடிய நிலையில் இருந்த பெரும்பாலான பாகங்கள் உப்பு காகிதம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, புதிய வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

காரின் மேற் பாகங்களுக்கு மட்டுமின்றி சேஸிஸ் அமைப்பிற்கும் புதிதாக வண்ணம் வழங்கப்பட்டிருக்கின்றது. மீண்டும் கார் துருவிற்கு இரையாகக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை மாடிஃபிகேஷன் குழு மேற்கொண்டுள்ளது. இதேபோன்று, எஞ்ஜின் மற்றும் 4X4 பரிமாற்றம் கருவியும் சுத்தமும் செய்யப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டிருக்கின்றது.

இதைத்தொடர்ந்தே பிற பாகங்களான கதவுகள், கண்ணாடி, ஜன்னல்கள் மற்றும் ஹூட் உள்ளிட்டவை புதிய நிலைக்கு மாற்றப்பட்டு பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த காரின் பழைய தோற்றம் மாற கூட என்பதற்காகவே பெரும்பாலான பழைய பாகங்களை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பி அக்குழுவினர் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆகையால், இதன் இருக்கை அமைப்பும் மாற்றப்படாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தற்போதும் இக்காரில் முகம் பார்த்து அமரக்கூடிய வகையிலான பென்ச் இருக்கைகளை நம்மால் காண முடியும். ஆகையால், புதிதாக உற்பத்திக்கு வந்த மாருதி ஜிப்ஸி காரைப் போலவே அது காட்சியளிக்கின்றது. இந்த முழுமையான தோற்றத்திற்காக மாடிஃபிகேஷன் குழு தொடர்ச்சியாக 7 மாதங்களை செலவு செய்திருக்கின்றது.
இந்த கால தாமதத்திற்கு கொரோனா வைரசால் ஏற்பட்ட முழு பொது முடக்கம் ஓர் காரணம் ஆகும். பொது முடக்கம் நிலவவில்லை என்றால் 3 முதல் 4 மாதங்களுக்கு உள்ளாக பணிகள் அனைத்தும் நிறைவடைந்திருக்கும் என கூறுகின்றது அந்த மாடிஃபிகஷேன் குழு. இந்த மாற்றத்தைச் செய்தது ஜம்முவை மையமாகக் கொண்டு பேக்யார்ட் கஸ்டம்ஸ் எனும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications